Home தொழில் நுட்பம் அண்டிராய்டிற்கு, இனி எம்எஸ் ஆபிஸ் இலவசம் – மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு!  

அண்டிராய்டிற்கு, இனி எம்எஸ் ஆபிஸ் இலவசம் – மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு!  

709
0
SHARE
Ad

microsoftகோலாலம்பூர், பிப்ரவரி 2 – ஆவணங்கள், அட்டவணைகள், கணக்குப்பதிவுகள், அலுவலக குறிப்புகள் போன்றவை டிஜிட்டல் முறைக்கு மாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவற்றை தொகுப்பதும், மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினமான பணியாக இருந்தது. அப்பொழுது, மைக்ரோசோஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘எம் எஸ் ஆபிஸ்’ (MS Office) மென்பொருள், ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

எம்எஸ் ஆபிஸிற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் பல மென்பொருட்களை அறிமுகப்படுத்தினாலும், மைக்ரோசோஃப்ட்டிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தற்போது தொழில்நுட்ப உலகம் செல்பேசிகளின் தளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால், மாற்றங்களை ஏற்றுக் கொண்ட மைக்ரோசாப்ட், எம் எஸ் ஆபிஸ் மென்பொருளை, திறன்பேசிகளுக்கு ஒத்துழைக்கும் செயலியாக மாற்றியது.

இந்நிலையில், கடந்த வாரம் மைக்ரோசோஃப்ட் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இனி அண்டிரொய்டு தட்டைக் கணினிகளை வைத்திருக்கும் பயனர்கள் எம்எஸ் ஆபிஸின் புகழ்பெற்ற பயன்பாடுகளான ‘வேர்ட்’ (Word), ‘எக்ஸல்’ (Excel) மற்றும் ‘பவர் பாயிண்ட்’ (PowerPoint) பயன்பாடுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், “ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு, பயனளிக்கும் வகையில் மைக்ரோசோஃப்ட் ‘அவுட்லுக்’ (Outlook)-ஐ மேம்படுத்தக் கூடிய செயலி ஒன்றும் வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளது.

சதுரங்க விளையாட்டின் ‘கேம்பிட்’ (gambit) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு. சிறிய காயை விட்டுக் கொடுத்து முக்கிய இடத்தை பிடிப்பதே அதன் பொருள். சத்யா நாதெல்லாவின் இந்த புதிய முடிவு கேம்பிட்டிற்கு ஒப்பானது என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைக்ரோசோஃப்ட் இதுவரை எம்எஸ் ஆபீஸ் பயன்பாடுகளை இலவசமாக வழங்கியதில்லை. செல்பேசிக்கான முதல் ஆபிஸ் பதிப்பு வெளியான பொழுது கூட அதன் சோதனை பதிப்புதான் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், வேர்ட், பவர் பாயிண்ட் மற்றும் எக்ஸலின் முழு பதிப்பு இலவசமாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அண்டிரொய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மில்லியன்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அவர்களை எம்எஸ் ஆபிஸின் செயலிகளுக்கு அறிமுகப்படுத்துவது தற்சமயம் மிக முக்கியமான ஒன்று. அதன் காரணமாகவே தற்போது மேற்கூறிய பயன்பாடுகளை சில காலத்திற்கு இலவசமாக வழங்க நாதெல்லா முடிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.