Home நாடு “தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்வதை நிறுத்துங்கள்” – நஜிப்புக்கு நூருல் இசா மனு!

“தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்வதை நிறுத்துங்கள்” – நஜிப்புக்கு நூருல் இசா மனு!

395
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான நூருல் இசா அன்வார், ‘change.org’ என்ற இணையதளம் மூலமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு கோரிக்கை மனு ஒன்றை விடுத்துள்ளார்.

Untitled

நஜிப்புக்கு கடிதம் என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த மனுவில் நூருல் இசா கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“மலேசியாவில் ஜனநாயகத்திற்கு பற்றாக்குறை இருப்பதை அறிவோம். மலேசிய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இது அடிப்படை பேச்சுரிமைக்கு எதிரான தடை மட்டும் அல்ல. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற எதிர்ப்பு உரிமைக்கு எதிரானது.”

“எனவே, இது ஒரு அபாயகரமான முன்னுதாரணமாக நான் கருதுகின்றேன். நான் விசாரணை செய்யப்படுவேன். காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வாங்கப்படுவேன் என்பது எதிர்பார்த்தது தான். அதை நான் விருப்பத்துடன் முன்வந்து செய்தேன். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஒருநாள் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். என்னைத் தொடர்ந்து, எனது சக பணியாளர்கள், கட்சியின் தலைமைச் செயலாளர், மற்ற உதவித் தலைவர்கள் ஆகியோர் பல்வேறு விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டனர்.”

“எதிர்கட்சியில் இருந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, எந்த ஒரு கேள்வியும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமா? அவர்களைப் பொறுத்தவரையில் எங்களது எதிர்ப்புக் குரலை அமைதிப்படுத்த வேண்டும். பயம் என்ற கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.”

“இதற்காக தான் மலேசியர்கள் எழுச்சியடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். காரணம், எதிர்கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, நான்காவது முறையாக தண்டனை விதிக்கப்படுகின்றது. எதிர்கட்சியினர் அவமதிக்கப்படுவதையும், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவமதிக்கப்படுவதையும், ஊடகப் பணியாளர்கள் கூட கைது செய்யப்படுவதையும் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகின்றீர்கள்.தீர்ப்புக்கு எதிராக டிவிட்டரில் விமர்சனம் செய்ததற்காக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கேலிச்சித்திரக்காரர் சூனா மீது 9 தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.”

“இதெல்லாம் என்னை அச்சமடையச் செய்யுமா? உங்களுக்கு தெரியுமா? கடந்த 17 ஆண்டுகளாக உருமாற்றத்திற்காக செயல்பட்டு வருகின்றோம். வெறும் 17 ஆண்டுகள் தான். எங்களுக்கு முன் பலர் செயல்பட்டுவருகின்றார்கள். எதிர்ப்பதற்கும், சண்டையிடுவதற்கும் ஒருவேளை நாங்கள் இல்லையென்றால், நமது தாய்நாட்டில் விட்டுச் செல்வதற்கு ஒன்றுமே இருக்கப்போவதில்லை.” – இவ்வாறு தனது மனுவில் நூருல் இசா அன்வார் கூறியுள்ளார்.

இந்த மனுவை தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இன்று காலை பகிர்வு செய்துள்ள நூருல் இசா, அதில் கையெழுத்திடுமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.