Home கலை உலகம் “தடம்” – தமிழர் தொன்மையைக் கூறும் அஸ்ட்ரோவின் புதிய தொடர் – இந்தியத் தூதர் திருமூர்த்தி...

“தடம்” – தமிழர் தொன்மையைக் கூறும் அஸ்ட்ரோவின் புதிய தொடர் – இந்தியத் தூதர் திருமூர்த்தி தொடக்கி வைத்தார்!

1837
0
SHARE
Ad

Thadam

கோலாலம்பூர், ஏப்ரல் 14 – தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குப் புறப்பட்டு தடம் பதித்த தமிழ் மக்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஆவண விளக்கமாக எடுத்துக் கூறும் தொலைக்காட்சித் தொடராக அஸ்ட்ரோ உருவாக்கியுள்ள ‘தடம்’ என்ற நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி இன்று தொடக்கி வைத்தார்.

Untitled

#TamilSchoolmychoice

இன்று கோலாலம்பூரிலுள்ள நுண்கலைக் கோயில் அரங்கில் (டெம்பள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்ட்ரோவின் பயணத்தில் அவர்களுடன் உறுதுணையாக இருந்த தமிழ் ஊடகங்களுக்கும், தமிழுக்குப் பெருமை சேர்த்த சில பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டு, நினைவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Thadam 11

நிகழ்ச்சி தொடங்கிய போது தமிழ் வாழ்த்து பாடப்பட்ட கணம் முதல்  மலேசியாவின் பிரபல ஓவியர் தனது கைவண்ணத்தைக் காட்டும் விதத்தில் ஓவியம் ஒன்றை வரைய ஆரம்பித்தார்.

IMG_9482

நிகழ்ச்சி ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் நிறைவு பெற்ற போது, ஓவியர் சந்திரனின் கற்பனையிலும், கைவண்ணத்திலும் அழகிய ஓவியமாக மலர்ந்த மகாபலிபுரத்தின் கடற்கரைக் கோயில், ‘தடம்’ நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்திக்கு நினைவுச் சின்னமாக வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ‘தடம்’ அறிமுக நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்த அஸ்ட்ரோ குழுமத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி (Chief Operations Officer) ஹென்ரி டான்’னுக்கு ஓவியர் சந்திரன் வரைந்த அங்கோர் வாட் பழமையான ஆலயத்தின் ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

டாக்டர் ராஜாமணியின் வரவேற்புரை

Thadam1நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவுக்கான தலைவர் டாக்டர் ராஜாமணி, புதிதாக மலேசியாவுக்கான தூதராக நியமனம் பெற்றுள்ள டி.எஸ்.திருமூர்த்தி, ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் கூறுவது போன்று ‘வந்தார், பார்த்தார், வென்றார்’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றார் எனப் பாராட்டினார்.

“இங்கு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ளார் திருமூர்த்தி. இந்தியத் திருவிழாவை மலேசியாவின் முக்கிய நகரங்களில் நடத்தி சிறப்பு சேர்த்துள்ளார். அதே வேளையில் வெறும் கலை, பண்பாட்டு விழாவாக மட்டுமல்லாமல், இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தியத் திருவிழாவை நடத்தியிருக்கின்றார்” என்றும் ராஜாமணி விவரித்தார்.

திருமூர்த்தி பார்க்க அமைதியானவராக இருந்தாலும், பன்முகத் திறமை வாய்ந்தவர், இரண்டு நாவல்கள் எழுதியிருக்கின்றார் என்பதோடு வீணை வாசிக்கவும் தெரிந்தவர் என்ற ‘ரகசியத்தையும்’ ராஜாமணி தனது வரவேற்புரையில் வெளியிட்டார். திருமூர்த்தியின் நாவல்களில் ஒன்று ‘சென்னைவாசி’ என்பதாகும்.

“இன்று அறிமுகம் காணும் ‘தடம்’ என்னும் நிகழ்ச்சிக்கான தூண்டுதலையும், வடிவமைப்பையும் வகுத்துத் தந்தவர் எங்களின் அஸ்ட்ரோ தலைமைச் செயலாக்க அதிகாரி ஹென்ரி தான் ஆவார். ஒரு முறை அவருடன் கலந்தாலோசனை நடத்தியபோது அவரது அறையில் இருந்த அங்கோர் வாட், போன்ற தொன்மையான படங்களைக் காட்டி, இவற்றின் வரலாறுகளை எடுத்துக்கூறும் ஆவணப் படம் எடுக்கலாமே என்ற ஆலோசனையை வழங்கி அதற்குரிய வடிவத்தையும் எடுத்துக் கூறினார். அவருக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் ராஜாமணி தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

Thadam 15இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோவைச் சேர்ந்த சுஷ்மிதா முருகன் மிகச் சிறப்பாக வழிநடத்தியதோடு, தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகளின் இடையில் நடனங்களும், பாடல்களும் இடம் பெற்றன.

படங்கள் /செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்