Home உலகம் எகிப்து அதிபர் முர்சிக்கு மரண தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!

எகிப்து அதிபர் முர்சிக்கு மரண தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!

519
0
SHARE
Ad

Mohammed-Morsiப்ரஸெல்ஸ், மே 18 – எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனை கொடூரமான மனிதத்தன்மை அற்ற செயல் என்று தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது பிரிவினைவாத கொள்கைகளால், அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது சிறை உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

#TamilSchoolmychoice

முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பதேய், துணைத்தலைவர் கைரத் அல்-ஷேட்டர், இஸ்லாமிய மத குரு யூசுப் அல்-காரதாவி ஆகியோரும் அடங்குவர்.

இந்த தீர்ப்புக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பின் உயர் தூதரக அதிகாரி பெடெரிகா மொக்ஹெரினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; “ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து விதமான மரண தண்டனைக்கும் எதிரானது”.

“முக்கியமாக கூட்டு விசாரணை நடத்தி ஒரே நேரத்தில் பலருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது. அனைத்து வழக்குகளிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதை எகிப்து உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, துருக்கி மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்பான அம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட் முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை அனுப்பி வைத்தார்.

அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2-ஆம் தேதி, இவ்வழக்கில் நீதிமன்றம் தனது இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.