Home இந்தியா இந்தியாவில் நெஸ்லே பால் மாவில் புழுக்கள், வண்டுகள் – உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!

இந்தியாவில் நெஸ்லே பால் மாவில் புழுக்கள், வண்டுகள் – உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!

458
0
SHARE
Ad

nestle-nan-pro-3-toddler_5101ad86109a9கோவை, ஜூன் 4 – நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் “மோனோ சோடியம் குளுடாமேட்’ என்ற ரசாயனம் அதிக அளவில் கலந்துள்ளதாக வெளியான தகவலால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோவையில் அதே நெஸ்லே நிறுவனத்தின் பால் மாவிலும் புழுக்கள், வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது குழந்தைக்கு நெஸ்லே நிறுவனத்தின் “நான்ப்ரோ 3′ என்ற பால் மாவை வாங்கினார்.

இந்த பால் மாவை குடித்த குழந்தைக்கு இரண்டு நாள் கழித்து வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நெஸ்லே பால் மாவை பார்த்த போது அதில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது புகார் தெரிவித்த பிரேம் ஆனந்த், தன்னிடம் மீதி இருந்த நெஸ்லே பால் மாவையும் கோவையில் உள்ள உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தார்.

அப்போது அந்த பால் மாவில் உயிருடன் 28 புழுக்கள், 22 சிறு வண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் புகார் செய்தார்.

மேலும் தன்னிடமிருந்த பால் மாவுகளையும் அவர் கொடுத்தார். இந்தச் சோதனை அறிக்கையில் அந்தப் பால் மாவை அருந்தத் தகுதியற்றது எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.கதிரவனிடம் பிரேம் ஆனந்த் எழுத்துப்பூர்வமாக கடந்த திங்கள்கிழமை புகார் தெரிவித்தார்.

இந்தப் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு உணவுக் கட்டுப்பாட்டு ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.

CW-LT-Nestle-NAN_high_458655053உணவுப் பாதுகாப்பு இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோவை மாநகரில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நெஸ்லே நிறுவனத்தின் “நான்ப்ரோ 3′ பால் மாவுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்தனர்.

இந்தப் பால் மாவுகள் அனைத்தும் உணவுப் பகுப்பாய்வு மையத்துக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.  இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர்.கதிரவன் கூறுகையில்,

“இந்தப் பால் மாவுகள் தொடர்பான விசாரணை அறிக்கை 14 நாள்களில் கிடைக்கப்பெறும். இந்த விசாரணை அறிக்கையில் அந்தப் பால் மாவை உட்கொள்ளத் தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் “மோனோ சோடியம் குளுடாமேட்’ என்ற ரசாயனம் அதிக அளவில் கலந்துள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதே நெஸ்லே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான “நான்ப்ரோ 3′ பால் மாவில் புழுக்கள், வண்டுகள் கிடந்த விவகாரம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.