சென்னை – கடந்த 33 வருடங்களாக ஜெயலலிதாவின் நிழலாகப் பின்தொடர்ந்து தமிழகத்திற்கு நன்கு அறிமுகமான சசிகலா எப்படி இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவரது மேடைப் பேச்சையோ, அல்லது உரையையோ யாரும் இதுவரை கேட்டதில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ‘சின்னம்மா’-வாக உருவெடுத்த பின்னர் ஒட்டுமொத்த தமிழகமே அவரது குரல் கேட்கக் காத்திருந்தது.
அவரால் சரளமான தமிழில் உரையாட முடியுமா? மேடைக் கூச்சம் இன்றி பேசுவாரா? சாதாரண மக்களைக் கவரும் விதத்தில் பேசுவாரா? என்றெல்லாம் கேள்விக் கணைகளுடன் காத்திருந்தன தமிழகத்தின் ஊடகங்கள்!
ஆனால், அனைத்துத் தரப்பினரையும் தனது முதல் கன்னிப் பேச்சின் மூலம் அசத்தி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
இன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் அதிகாரபூர்வமாக பதவியில் அமர்ந்த பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அழகான தமிழில், பிசிறின்றி பேசி அசத்தினார் என்றுதான் கூற வேண்டும்.
சிறப்பாக தயாரிக்கப்பட்ட உரையை வாசித்தார் என்றாலும், அவரது வார்த்தைகள் தெளிவான உச்சரிப்புடன், தடுமாற்றமின்றி வந்து விழுந்தன.
ஜெயலலிதா குறித்துப் பேசிய போதெல்லாம், கலங்கிய கண்களுடன், தழுதழுத்த குரலுக்கு அவர் மாற, அந்தக் காட்சிகள் அதிமுகவின் கடைசித் தொண்டனை நிச்சயம் ஓர் உலுக்கு உலுக்கி கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தின் முக்கியத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அவரது உரையை நேரலையாக ஒளிபரப்பின.