சென்னை : எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது.
எனினும் 2 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆதரவைக் கொண்டிருக்கும் அதிமுக இன்னும் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேமுதிக கட்சிக்கும் பாமக கட்சிக்கும் அதிமுக ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்கும் என ஆரூடங்கள் கூறப்பட்ட வேளையில் அதிமுக தங்களின் சொந்த உறுப்பினர்களையே வேட்பாளர்களையே நிறுத்துவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தாங்கள் எந்தக் கூட்டணியில் இருப்போம் என்பதை எதிர்வரும் ஜனவரி 2026-இல்தான் முடிவெடுப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார்.
இதற்கிடையில் பாமகவில் தந்தை இராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான மோதல் மோசமடைந்து வருவதால் பாமக பிளவுபடுவது உறுதியாகிவிட்டது. எனவே, பாமக இரண்டு அணியாக பிரிந்து கிடப்பதால், அதிமுக பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்காது என்பதும் உறுதியாகிவிட்டது.
அடுத்த கட்டமாக, அதிமுக சார்பில் போட்டியிடப்போகும் அந்த இரண்டு வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.