
கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ இரமணன் பிகேஆர் உதவித் தலைவராக வெற்றி பெற்றிருப்பது இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான அவரின் சேவைகளுக்கு மேலும் வலிமை சேர்க்கும் என நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் வாரியத் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன் தெரிவித்தார்.
தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை துணையமைச்சரான டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பதற்கு எனது தனிப்பட்ட சார்பிலும் நேசா கூட்டுறவுக் கழக இயக்குநர்கள் வாரிய சார்பிலும் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சசிகுமார் தெரிவித்துக் கொண்டார்.

“நாட்டை ஆளும் மடானி ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் தலைமைத்துவத்தில் இயங்கும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், இரமணன் ஏற்கனவே கூட்டுறவுத் துறைக்கு வழங்கி வரும் சேவைகளுக்கு, இந்தப் புதிய பதவி அவருக்கு மேலும் வலிமை சேர்க்கும் என நாங்கள் நம்புகிறோம். கூட்டுறவுத் துறை துணையமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், இரமணன், மலேசியாவில் இயங்கும் கூட்டுறவுக் கழகங்களோடு அணுக்கமாக, இணைந்து பணியாற்றி பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு கண்டு வருகிறார். குறிப்பாக, இந்தியக் கூட்டுறவுக் கழகங்களோடு நேரடி தொடர்புகளை நிலை நிறுத்தும் வண்ணம், இந்தியக் கூட்டுறவு இயக்கங்களுக்கென சிறப்பு மாநாட்டை நடத்தினார். சிறப்பாக செயல்படும் கூட்டுறவுக் கழகங்களுக்கு அரசாங்க மானியங்களையும் வழங்கி உதவி புரிந்திருக்கிறார்” என தனது பத்திரிக்கை அறிக்கையில் சசிகுமார் குறிப்பிட்டார்.
“கூட்டுறவுத் துறை தவிர தொழில் முனைவோர்களுக்கும், குறிப்பாக இந்தியத் தொழில் முனைவோர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் பேங்க் ராயாட் கடனுதவித் திட்டங்கள் போன்ற பல்முனைத் திட்டங்களின் வழி இரமணன் உதவி புரிந்துள்ளார். நாட்டின் பொருளாதார வலிமைக்கும், வளர்ச்சிக்கும் கூட்டுறவுக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதிலும் இந்திய சமூகத்தின் சொத்துடமை விழுக்காட்டை நிலைநிறுத்துவதற்கு இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியக் கூட்டுறவுக் கழகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. இந்நிலையில் கூட்டுறவுத் துறை துணையமைச்சரான இரமணன் ஆளும் அரசாங்கத்தின் முக்கிய கட்சியான பிகேஆரின் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, கூட்டுறவுத் துறையை, குறிப்பாக இந்தியர் கூட்டுறவுக் கழகங்களின் நலன்களை அவர் மேலும் சீர்மைப்படுத்த அவருக்கு வலிமை சேர்க்கும்” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்த சசிகுமார், டத்தோஸ்ரீ இரமணன் தொழில் முனைவோர் கூட்டுறவுத் துறை துணையமைச்சராக, தொழில் முனைவோர் சமூகத்திற்கும், கூட்டுறவுத் துறைக்கும் தனது பணிகளை சிறப்புற தொடர்ந்து வழங்கி வருவார் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.