Home நாடு தெங்கு சாப்ருல் விலகலால், அம்னோ-பிகேஆர் மோதல் ஏற்படுமா?

தெங்கு சாப்ருல் விலகலால், அம்னோ-பிகேஆர் மோதல் ஏற்படுமா?

109
0
SHARE
Ad
தெங்கு சாப்ருல்

புத்ரா ஜெயா: அனைத்துலக வாணிப அமைச்சரான தெங்கு சாப்ருல் தெங்கு அசிஸ் அம்னோவிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர், கோத்தா ராஜா அம்னோ தொகுதி தலைவர், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அதற்கான பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைமைத்துவத்திடம் சமர்ப்பித்திருப்பதாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் தெரிவித்தார். 1997-ஆம் ஆண்டு முதல் அம்னோவுடன் இணைந்து தான் பயணம் செய்து வந்திருப்பதால் இந்த முடிவு ஒரு நெருடலான முடிவு என்றும் இதனால் நான் பல நாட்கள் இது குறித்து சிந்தித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியிடம் இது குறித்து மனம் விட்டு விவாதித்ததாகவும் தெங்கு சாப்ருல் கூறியிருக்கிறார்.  சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அவரை நிதி அமைச்சர் பொறுப்புக்கு டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பிரதமரானதும் நியமித்தார். தொடர்ந்து இஸ்மாயில் சாப்ரியும் தனது பதவிக் காலத்தின் போது அவரையே நிதியமைச்சராக நிலை நிறுத்திக் கொண்டார்.

#TamilSchoolmychoice

செனட்டராகப் பதவி வகிக்கும் அவரின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் நிறைவடைகிறது. அதற்குப் பின்னர் அவர் அமைச்சராக நீடிக்க முடியாது.

இதற்கிடையில் மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2022 பொதுத் தேர்தலில் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக அவர் போட்டியிட்டார். எனினும் நடப்பு சுகாதார அமைச்சர் அமானா- பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் சுல்கிப்ளி அகமட்டிடம் தோல்வி கண்டார். தொடர்ந்து செனட்டராகவும் அமைச்சராகவும் நீடித்தார்.

பிகேஆர் கட்சியில் இணைகிறார்

அன்னோவில் இருந்து விலகும் அதே வேளையில் பி கே ஆர் கட்சியில் தான் இணைய விருப்பம் கொண்டுள்ளதாக அவர் பி கே ஆர் தலைவர் அன்வார்  இப்ராகிமுடனும் பிகேஆர் தலைமைச் தலைமைச் செயலாளருடனும் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் அம்னோ தலைமைச் செயலாளர் டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி விடுத்த அறிக்கை ஒன்றில் அம்னோவிலிருந்து விலகும் தெங்கு சாப்ருலின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தெங்கு சாப்ருலின் இந்த பதவி விலகல் விவகாரத்தை அம்னோ கடுமையாகக் கருதுகிறது, காரணம் ஒரே கூட்டணியில் இருக்கும் அம்னோவிலிருந்து விலகி பிகேஆர் கட்சிக்குத் தாவுவது ஒரு முறையற்ற அரசியல் நடவடிக்கை என்றும் அவர் வர்ணித்தார்.

ஒற்றுமைக் கூட்டணியின் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நகர்வு இது என்றும் கூட்டணிக் கட்சிகளின் அடிமட்ட உறுப்பினர்களிடையே இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் அஷ்ராப் வர்ணித்தார்.