கோலாலம்பூர்: துணைப் பிரதமரும், புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி இலண்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பல அம்னோ தலைவர்கள் உடன் சென்றுள்ளது என்ன காரணத்திற்காக என்ற கேள்விகள் ஊடகங்களில் எழுப்பபட்டுள்ளன.
அம்னோ சார்ந்த அந்த தலைவர்கள், விரைவில் நடைபெறப் போகும் அமைச்சரவை மாற்றத்தில் தங்களுக்கும் வாய்ப்பு வழங்க சாஹிட்டுக்குக் கோரிக்கை விடுக்க இலண்டன் சென்றிருக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது.
அதே வேளையில், அண்மையில் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தல்கள், அதைத் தொடர்ந்து அனைத்துலக வாணிபத் துறை அமைச்சர் தெங்கு சாப்ருல் அம்னோவிலிருந்து விலகி பிகேஆர் கட்சிக்குத் தாவுவது – அவரே அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் ஆகலாம் என்ற ஆரூடங்கள் – போன்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்பதற்கான நெருக்குதலாக இருக்குமா என்ற ஐயப்பாடுகளும் எழுந்துள்ளன.
சாஹிட்டின் மூன்று செயலாளர்கள், மாரா தலைவரும் அம்னோ தலைமைச் செயலாளருமான டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி ஆகியோர் சாஹிட்டின் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். அஷ்ராஃப் வாஜ்டி அம்னோ தலைமைச் செயலாளர் என்றாலும் அவர் தலைவராக இருக்கும் மாரா நிறுவனம் சாஹிட்டின் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் அமைப்பாகும். அதனால் அவர் உடன் சென்றுள்ளது ஏற்புடையதே என்றும் எனினும் மேலும் குறைந்தது எட்டு முக்கியத் தலைவர்கள் சாஹிட்டுடன் இலண்டன் சென்றுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.