Home நாடு யுனேஸ்வரன் : “அன்வார் மனித உரிமைகளைத் தற்காப்பதில் ஒரே நிலைப்பாடுடன் செயல்படுகிறார்!”

யுனேஸ்வரன் : “அன்வார் மனித உரிமைகளைத் தற்காப்பதில் ஒரே நிலைப்பாடுடன் செயல்படுகிறார்!”

47
0
SHARE
Ad
ஆர்.யுனேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மனித உரிமைகளைத் தற்காப்பதிலும், அமைதியான முறையில் கூட்டங்கள் கூடுவதற்கும், அரசியல்வாதிகள் குறித்த கேலிகளையும், கிண்டல்களையும், தற்காப்பதற்கும் எப்போதுமே தன் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியாக இருந்து வருகிறார் என பிகேஆர் கட்சியின் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கூறினார்.

பாஹ்மி ரெசா என்ற சமூக செயற்பாட்டாளர் மீது விதிக்கப்பட்டிருக்கும் பயணத் தடை குறித்து மறு ஆய்வு செய்யுமாறு காவல்துறையை பிரதமர் கேட்டுக் கொண்டார் என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

அன்வார் மீது குறைகூறுவோர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய யுனேஸ்வரன் பிரதமர் தொடர்ச்சியாக அமைதியான முறையில் கூட்டங்கள், கேலிச்சித்திரங்கள், மாணவர் போராட்டங்கள் போன்ற விவகாரங்களில் தன் நிலைப்பாட்டில் ஒரே நிலையில் இருந்து வருகிறார் என்றார்.

#TamilSchoolmychoice

அன்வார் மீதான கேலிச் சித்திரங்களை எரித்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என யுனிவர்சிடி மலேசியா சபா பல்கலைக் கழக நிர்வாகத்தை அன்வார் கேட்டுக் கொண்டுள்ளதாக, உயர்கல்வி அமைச்சர் சாம்ரி அப்துல் காடிர் கூறியிருப்பதையும் யுனேஸ்வரன் நினைவு கூர்ந்தார்.

தனக்கு எதிராக கருத்து கூறியிருக்கிறார்கள் என்பதைவிட அந்த மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது என்பதை அன்வார் வலியுறுத்தினார் என்றும் யுனேஸ்வரன் கூறினார்.

மேற்கூறப்பட்ட அம்சங்களுக்காக தானே முன்னின்று போராடியவர் அன்வார் என்றும் கூறிய யுனேஸ்வரன் “அவரே மாணவர் தலைவராக இருந்து மாணவர் உரிமைகளுக்காகப் போராடியவர் – அதன் காரணமாக, மகாதீர் கல்வி அமைச்சராக இருந்தபோது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் 1974-இல் ஈராண்டு சிறைவாசத்தை அனுபவித்தவர் அன்வார்” என்றும் அறிக்கை ஒன்றில் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

அன்வார் தன் நிலைப்பாடுகளை மாறி மாறித் தனக்கு விருப்பம்போல் தேர்வு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் யுனேஸ்வரன் மறுத்தார். எப்போதுமே பிரதமர் பகிரங்கமாகவும், வெளிப்படைத்தன்மையோடும், இத்தகைய விவகாரங்களில் தன் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார் என்றும் அவர் பிரதமரைத் தற்காத்தார்.

“கேலிச் சித்திரங்களை உருவாக்குவதில் பாஹ்மி ரெசாவுக்கு இருக்கும் உரிமையை கடந்த டிசம்பரில் தற்காத்த அன்வார், சபா ஆளுநர் மூசா அமான் மீதான கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டனம் செய்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஓவியத்தை வரைந்ததற்காக பாஹ்மியை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட வேண்டியதில்லை என்றும் அன்வார் கூறியிருந்தார். மூசா அமான் 2020-இல் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்” என்றும் யுனேஸ்வரன் தன் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான 2012-ஆம் ஆண்டு சட்டம், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் திருத்தப்படும் எனவும் அன்வார் அறிவித்தார் என யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

“அன்வாரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சீர்திருத்தங்களை பகிரங்கமாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் மேற்கொள்ள அவர் கொண்டுள்ள கடப்பாட்டை பிரதிபலிக்கிறது. எனவே, அவர் குறித்து எதிர்மறை விமர்சனங்களை முன்வைப்பவர்கள், நியாயமாகவும், நடுநிலையோடும் அவற்றை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்” என்றும் யுனேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.