அப்ப தான் நம்ம ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ லாரன்ஸ் (சிவா) ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றம் வாங்கிட்டு வராரு. வந்தவரு வில்லன அடக்குவாருன்னு பார்த்தா, கண்ணாபின்னான்னு ரௌடிகளோட சேர்ந்துக்கிட்டு லஞ்சம் வாங்குறாரு, குத்துப்பாட்டுக்கு ஆடுறாரு, நிக்கி கல்ராணிய விரட்டி விரட்டி காதலிக்குறாரு. ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறாரு? என்ற கேள்விக்கு ஒரு பிளாஷ்பேக் வச்சிருக்காங்க.
படத்துல என்ன இருக்கு?
கொஞ்சம் சேட்டைக்கார போலீசாகவும், பிறகு ‘ரொம்பவே’ போலீசாகவும் இரண்டு விதமாக வித்தியாசம் காட்டி நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் லாரன்ஸ். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் அனைத்திலும் அவரது தனித்துவமான நடனம் மிகவும் ரசிக்க வைக்கிறது.
‘காஞ்சனாவில்’ எதிரிகளைப் பேயடி அடித்த மாதிரி, இப்படத்தில் ஒற்றை ஆளாக எதிரிகளை பிரித்து மேய்கிறார் லாரன்ஸ். படத்தில் அவரை அவரே, “அரைகுறை மெண்டல் போலீஸ்’ என்று சொல்லிக் கொள்கிறார். அதுக்காக கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேண்டாமா போலீஸ்கார்?
‘ஹரஹரமகாதேவகி’ பாடலுக்கு வந்து கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் லஷ்மி ராய். டிங்கு சர்ச்சையால் இந்தப் பாடல் நன்றாகவே பிரபலமாகியிருக்கிறது. லஷ்மி ஆடியவுடன் அதற்கு கூடுதல் மவுசு வந்துவிட்டது.
ஸ்ரீமன், கோவை சரளா, தம்பி இராமையா, சாம்ஸ், சதிஸ், மனோபாலா, தேவதர்ஷினி, மதன்பாப் என நகைச்சுவைக்கென்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் காமெடிக்காட்சிகள் அந்தளவிற்கு எடுபடவில்லை.
சர்வேஸ் முராரி ஒளிப்பதிவில் கதைக்கேற்ப காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அம்ரிஸ் கணேஷ் இசையமைப்பில் குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கக் கூடியவையாக பாடல்கள் இருக்கின்றன.
யாருக்கான படம்?
எனக்கு கதை, லாஜிக் பற்றி கவலையே இல்லங்க.. அனல் பறக்குற மாதிரி சண்டை இருக்கணும், காட்சிகள் சும்மா தீயாய் நகரணும், “டாய்..” “ஏய்..” “வாடா” இப்படியாக ஸ்பீக்கர் வைக்காமலேயே ஊரே கேக்குற மாதிரி ஹீரோவும், வில்லனும் மாறி மாறி போனில் கத்தணும்.. இப்படிப்பட்ட படம் தான் எனக்கு வேணும்னு நெனக்குறவங்க.. இந்தப் படத்த தாராளமா போய் பார்க்கலாம்.
மற்றபடி, லாரன்ச காக்கிச்சட்டையில பார்த்திட்டு, அடடா.. சூர்யாவின் ‘சிங்கம்’ படம் மாதிரி, திரையரங்க விட்டு வெளியே வரும் போது அப்படியே நெஞ்ச நிமித்திக்கிட்டு, “போலீஸ்காரன்னா இப்படி இருக்கணும்பா” சொல்ற மாதிரி படம்னு நெனச்சு போனா ஏமாற்றம் தான்.
-ஃபீனிக்ஸ்தாசன்