மக்களுக்காக உழைத்தவர்களுக்கு கௌரவிப்பு
இது ஒரு வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் முற்றிலும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தோட்ட மாளிகையில் தோட்டப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிலாங்கூர் மாநில அரசு அமைக்கவிருக்கும் தங்கும் விடுதி கட்டுமான அறிமுக விழா நடத்தப்படுகிறது.
மேலும், மக்களுக்காக உழைத்து ஓய்ந்தவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியையும் 2-2-2013 இல் காலை மணி 10.00 க்கு ஒருசேர நடத்துகிறது சிலாங்கூர் மாநில அரசு.
இந்நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார். மக்கள் நலன் போற்றும் பக்காத்தான் அரசின் மற்றுமொரு சமுதாயத் திட்டமான இதன் அறிமுக விழாவில் தவறாது கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என்றார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
இளைஞர்களைப் பயனுள்ளவர்களாக்குவது அரசின் பொறுப்பு
இன்று குற்றச்செயலில் ஈடுபடும் நம் இளைஞர்களின் எண்ணிக்கையும், குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் இந்திய குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை இந்நாட்டு அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய சமுதாயத்தில் பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்கள் குற்றச் செயல் மற்றும் சமூகச் சீர்கேடுகளில் சிக்கி அல்லல் படும் அவல நிலையைப் போக்க வேண்டும். அதற்குச் சிறைச்சாலையும், தண்டனையும் மட்டும் தீர்வாகாது.
அவர்களைச் சீர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில், இனி வரும் இளைஞர்களைச் சமுதாயத்திற்குப் பயனானவர்களாக ஆக்கும் பொறுப்பு அரசுடையது என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
நமது இளைஞர்களின் சீர்கேட்டுக்குச் சுற்றுச்சூழல் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்த மாணவர் தங்கும் விடுதி திட்டத்தின் வழி நம் இளைஞர்களுக்கு மாறுபட்ட சுற்றுச்சூழலை உருவாக்க முனைந்துள்ளது சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு. ஆக, நம் இளைஞர்களின் அறிவு ஆற்றலை அவர்களின் குடும்ப மேம்பாட்டுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் சேவியர் கூறினார்.