சென்னை, ஆகஸ்ட்10- சென்னை கடற்கரை ஊரான பட்டினப்பாக்கத்தில் பூச்சி இருந்த குளிர்பானத்தைக் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவருக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை அருகில் உள்ள பகுதி பட்டினப்பாக்கம். இங்குள்ள பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள கடையில் நேரு என்பவரும் அவருடைய நண்பர் வினோத் என்பவரும் பெப்சி குளிர்பானம் வாங்கிக் குடித்தனர்.
முதலில் வினோத் குடித்தார். குடித்த உடனேயே உடம்புக்கு ஒரு மாதிரி மயக்கமாக இருந்திருக்கிறது. ராமு அந்தப் போத்தலை வாங்கிப் பார்த்த போது உள்ளே பூச்சி செத்துக் கிடந்தது தெரிந்தது. உடனே கடைக்காரரிடம் முறையிட்டதற்கு அவர், கம்பெனித் தயாரிப்புக்கு நான் ஒன்றும் பண்ண முடியாது என்று கூறிவிட்டார்.
இதனால் இருவரும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் வாங்கிய போத்தலும் ஒப்படைக்கப்பட்டது.
அது ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டது. ஆய்வில், குளிர்பானத்தில் உயிரினம் அல்லது தாவரத்தின் கெட்டுப்போன அல்லது அழுகிய பொருள் இருந்துள்ளது என்றும், அது உடலுக்கு ஒவ்வாதது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், நுகர்வோர் குறைதீர் மன்றம், பெப்சி குளிர்பான நிறுவனமும் அதனை விற்பனை செய்த கடைக்காரரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.55,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், இந்தக் குளிர்பானம் விற்கப்பட்ட கடை பள்ளி வளாகத்தில் உள்ளதால், பள்ளி நிர்வாகத்திற்கும், பள்ளியில் கடை நடத்தும் உரிமையாளருக்கும் நுகர்வோர் குறைதீர் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


