
கோலாலம்பூர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் நாளை அனைத்துலக யோகா தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் மன்றம். அதைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் யோகா தினம் ஜூன் 21-ஆம் கொண்டாடப்படுவதோடு, அந்த நாளில் யோகா பயிற்சிகள் மக்களால் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு யோகா தினத்தை ஆந்திரா மாநிலத்தின் விசாகப் பட்டினத்தில் மக்களோடு இணைந்து யோகா பயிற்சிகள் செய்து கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார்.
கோலாலம்பூரிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டது
கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் பத்துமலை வளாகத்தில் ஜூன் 21-ஆம் தேதி காலை 7.45 மணி முதல் பொதுமக்களுடனான யோகா பயிற்சிகளுடன் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சுமார் 1,200-க்கும் மேற்பட்ட ஆர்வமிக்க பலதரப்பட்ட பங்கேற்பாளர்களையும், மாணவர்களையும் வரவேற்றார். இந்த ஆண்டுக்கான யோகா தினக் கருப்பொருள் குறித்தும் இந்தியத் தூதர் விளக்கமளித்தார்.

யோகா மலேசியாவில் வளர்ச்சிபெற ஆதரவு வழங்கிவரும் பல்வேறு தரப்புகளுக்கு நன்றி தெரிவித்த இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி, எல்லா வகையிலும் யோகாவுக்கு ஆதரவு தந்து வரும் மலேசிய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
மலேசியாவில் அனைத்து வயதினரிடத்திலும் யோகா பிரபலமடைந்து வருவதை சுட்டிக் காட்டிய பி.என்.ரெட்டி, உடல்நலம், உடற்பயிற்சி, மனநலப் பயிற்சிகளிலும் யோகா ஓர் அங்கமாக அதிக அளவில் இடம் பெற்று வருவதையும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.நகுலேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தனதுரையில் இந்த ஆண்டுக்கான யோகா தினக் கருப்பொருளான ‘ஒரே பூமிக்கான யோகா, ஒரே சுகாதாரம்’ என்பது இன்றைய நாளில் மிகவும் தேவையான ஒன்று என்றும் தற்போதைய உலக நடப்புக்கு ஏற்புடையதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கம் தற்போது யோகாவை சட்டபூர்வமான விளையாட்டாக அங்கீகரித்துள்ளது என்பதையும் நகுலேந்திரன் தெரிவித்தார்.
யோகாவை பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அறிமுகப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும், அனைவரின் வாழ்க்கையிலும் ஓர் அங்கமாக யோகா இடம் பெறவும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக யோகா விளங்கவும் இந்தியத் தூதரகமும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையமும் எடுத்து வரும் முயற்சிகளை நகுலேந்திரன் பாராட்டினார்.
அவரின் உரையைத் தொடர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் பங்கேற்பாளர்கள், யோகா பயிற்றுநர்களின் வழிகாட்டுதலோடு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தின் யோகா ஆசிரியர் சந்தீப் வாங்காடே தலைமையில் யோகா பயிற்சிகளையும் யோகாசனங்களையும் ஒருசேர மேற்கொண்டனர்.
மலேசிய சாதனைப் புத்தகத்தில்
இடம் பெற்ற யோகா பயிற்சி

யோகா தினத்தை முன்னிட்டு, ஒரே நேரத்தில் 35,000 மாணவர்கள் நேரடியாகவும் மெய்நிகர் நிகழ்ச்சியாகவும் யோகா பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் அந்த நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள வேதாத்திரி மனவளப் பயிற்சிக் கழகமும் தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர்கள் மன்றமும் இந்தியத் தூதரகத்துடனும், கோலாலம்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்துடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஜூன் 21-ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள வேதாத்திரி மையத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாடு முழுமையிலும் உள்ள 480 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 35,000 மாணவர்கள் நேரடிப் பயிற்சியாகவும், மெய்நிகர் இணையம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு அதிக எண்ணிக்கையிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகப் பயிற்சி செய்த மிகப் பெரிய நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
வேதாத்திரி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூர் இந்தியத் தூதரகத்தைப் பிரதிநிதித்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திரு ராஜேஷ் எச்.மணியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான யோகா தினம் ‘ஒரே பூமிக்கான யோகா, ஒரே சுகாதாரம்’ என்ற கருப்பொருளோடு கொண்டாடப்பட்டது.
2014-ஆம் ஆண்டு முதன் முதலில் ஐக்கிய நாடுகள் மன்றம் ஜூன் 21-ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதலாவது அனைத்துலக யோகா தினம் 2015-இல் கடைப்பிடிக்கப்பட்டது. 11-வது ஆண்டாக யோகா தினம் இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டது.
ஒரு மனிதனின் உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்து அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் செயல்பட யோகா முக்கியப் பங்காற்றுகிறது. சமூகங்களைப் பொறுத்தவரை மனித நேயமும் இயற்கையும் இணைந்து செயல்பட யோகா நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.