Home நாடு மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்

மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்

801
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றினார். அந்த உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் கட்சிக் கட்டுப்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, ஒன்றிணைந்து செயலாற்ற பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
  • தற்போதுள்ள அரசியல் குழப்படிகளைத் தொடர்ந்து தனக்கு 2 தேர்வுகள் இருக்கின்றன. முதலாவது பிரதமர் பதவியிலிருந்து விலகுவது, இரண்டாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பது.
  • எனக்குள்ள சுலபமான வழி பதவியிலிருந்து விலகிக் கொள்வது. அதன் பின்னர் மாமன்னர் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
  • ஆனால், இதுவரையில் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை.
  • இந்நிலையில் ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • நமது அரசியல் நெருக்கடியைத் தீர்க்க எல்லாக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
  • நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்துவேன் என மொகிதின் கூறியிருக்கிறார். எனினும் அவர் அதற்கான தேதியைக் குறிப்பிடவில்லை.
  • அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் வெற்றி பெற்றால், பிரதமருக்கான பதவிக் காலத்தை ஒருவர் 2 தவணைகளுக்கு மட்டுமே வகிக்க முடியும் என்ற சட்டத்தைக் கொண்டு வருவேன்.
  • நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு இனி மூத்த அமைச்சரவை உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
  • நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் வழங்கப்படும்.
  • 18 வயதானவர்கள் பதிவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி உடனடியாக அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.
  • ஆண்டுதோறும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சி பேதமின்றி சரிசமமாக அரசாங்க மானியங்கள் வழங்கப்படும்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யும் சட்டத்தையும் கொண்டு வருவேன் என்ற அறிவிப்பையும் மொகிதின் இன்றைய உரையில் விடுத்திருக்கிறார்.
  • ஆனால், இந்த மாற்றங்களில் சிலவற்றைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.
  • எனவே, எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்தால் இந்த அரசியல் மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும் என மொகிதின் தனதுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
  • அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்பாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் மொகிதின் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
  • ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்போம் என்றும் மொகிதின் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
  • இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பேச்சு வார்த்தைகள் மூலம் மீண்டும் மொகிதினுக்கு ஆதரவு தர முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • அடுத்த வாரத்தில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அவர்களின் கருத்துகளையும் திறந்த மனதுடன் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போவதாகவும் மொகிதின் தனது உரையில் தெரிவித்திருக்கிறார்.
  • எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை நேர்மையுடனும், மலேசிய அரசியலமைப்பு சட்டங்களுக்கு ஏற்பவும் கையாண்டுத் தீர்வு காண தான் உறுதி பூண்டுள்ளதாகவும் மொகிதின் கூறியிருக்கிறார்.