Home நாடு மாமன்னர், கட்சித் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்தார்

மாமன்னர், கட்சித் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்தார்

551
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இன்று மாமன்னர் சந்தித்தார்.

இதற்கு முன்னர் இதுபோன்ற நடைமுறையை மாமன்னர் பின்பற்றியதில்லை.

துன் மகாதீர் பதவி விலகியபோது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக சந்தித்து பிரதமராக யாருக்கு ஆதரவு என்பதைக் கேட்டறிந்தார் மாமன்னர்.

#TamilSchoolmychoice

ஆனால் அதற்குப் பின்னர் கட்சித் தலைவர்களை மட்டும் தனித் தனியாக சந்தித்து வந்தார்.

ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகள் உட்பட, அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நேரத்தில் அரண்மனையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சந்தித்தார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களில், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு, ஜனநாயக செயல்கட்சியின் தலைவர் லிம் குவான் எங், பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, பெஜூவாங் கட்சித் தலைவர் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன்னதாக அரண்மனையை வந்தடைந்தனர்.

கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திம் ஆகியோரும் உடனிருந்தனர்.

நேற்று திங்கட்கிழமை மொகிதின் யாசின் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்.

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை காபந்து பிரதமராக இருக்கும்படி மாமன்னர் மொகிதின் யாசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருப்பவரை அடுத்த பிரதமராக நியமிக்கும் அதிகாரத்தை மாமன்னர் கொண்டிருக்கிறார்.