Home Featured நாடு “கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்திருக்கிறார்கள்” – இறந்த பிரவினின் தந்தை புகார்!

“கட்டாயப்படுத்தி விஷம் குடிக்க வைத்திருக்கிறார்கள்” – இறந்த பிரவினின் தந்தை புகார்!

1112
0
SHARE
Ad

Nilaistudentdiesநீலாய் – சிரம்பான் நீலாய் டேசா ஜாஸ்மின் வட்டாரத்தில், 15 வயது சிறுவனின் வாயில், அவ்வட்டாரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் , விஷத்தை ஊற்றிக் கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அச்சிறுவனின் தந்தையான பால்மரம் வெட்டும் தொழிலாளி செல்வராஜன் (வயது 51) ஊடகங்களிடம் கூறியிருக்கும் தகவலில், கடந்த புதன்கிழமை மிகவும் சோர்ந்த நிலையில் பிரவின் வீடு திரும்பினார். என்னவென்று கேட்டதற்கு, இளைஞர் கும்பல் ஒன்று தனது வாயில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி விழுங்கச் செய்துவிட்டதாகவும், பின்னர் தன்னை ஒரு ஓடைக்குள் தூக்கி வீசிவிட்டதாகவும் தெரிவித்தார்.”

“அவர் மீது உறிஞ்சும் பசை போன்ற போதைப் பொருளின் வாசனை அடித்ததால், அவர் கூறியதை நான் நம்பவில்லை. அவருக்கு ஏற்கனவே உறிஞ்சும் பசை போன்ற பொருளை நுகரும் பழக்கம் இருந்தது”

#TamilSchoolmychoice

“சிறுவர்களுடன் சேர்ந்து பிரவினுக்கு புகைக்கும் பழக்கமும், பசை போன்ற பொருளை நுகரும் பழக்கமும் இருந்ததது. அதனால் கடந்த மார்ச் மாதமே அவரைப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்” என்று செல்வராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரவினை  வேறு பள்ளிக்கு  மாற்ற செல்வராஜன் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான், தனது வாயில் திரவம் ஊற்றப்பட்ட கதையுடன் பிரவின் வீடு திரும்பியிருக்கிறார்.

இரவில் உறங்கச் சென்ற பிரவின் காலையில் கடும் வயிற்றுவலியும், வாந்தியும் இருப்பதாகத் வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

“பிரவின் வாந்தி எடுத்தார். அதில் நீல நிறத்திலான பொருட்கள் தென்பட்டன. உடனடியாக அவரை நான் அருகில் உள்ள மருந்தகத்திற்குக் கொண்டு சென்றேன். பின்னர் அங்கிருந்து சிரம்பான் துங்கு ஜாபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்”

“தனக்கு நேர்ந்தவற்றை என்னுடைய மகன் துண்டு காகிதத்தில் எழுதி காவல்துறையிடம் கொடுத்தார். அவரால் பேச முடியவில்லை. தொண்டை வீங்கியிருந்தது” என்றும் செல்வராஜன் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சிகிச்சைப் பலனின்றி பிரவின் மரணமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், உறிஞ்சும் பசையை  பயன்படுத்தியதைக் கண்டித்த காரணத்திற்காக, பிரவின் வாயில் அந்த இளைஞர்கள் கும்பல் பூச்சிக் கொல்லி மருத்தை ஊற்றியிருக்கிறது என்றும் நீலாய் ஓசிபிடி கண்காணிப்பாளர் சலாவுதின் சல்டினோ கூறியிருக்கிறார்.