கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம் தேதிதான் எப்போதும் குறிப்பிடப்படும்.
90 வயதானாலும், மகாதீரின் நடை, உடை, பாவனை, நடவடிக்கைகளில் இன்னும் தொய்வையோ, தளர்வையோ பார்க்க முடிவதில்லை.
பதவியை விட்டு விலகினாலும், சோர்வில்லை – தொய்வில்லை!
இன்றும் தொலைக்காட்சிகளில் பேட்டி தருகின்றார். நாள் தவறாமல், தனது வலைதளத்தில் தனது கருத்துகளைப் பதிவு செய்கின்றார். கூட்டங்களில் கலந்து கொள்கின்றார். எத்தகைய உணர்ச்சிவசப்படக் கூடிய கேள்விகளையும், இலாகவமாகக் கையாண்டு பதில் தருகின்றார்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தனித்துவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பது பிரதமர் நஜிப்புக்கு எதிராகப் பல்வேறு அஸ்திரங்களைப் பிரயோகித்து, அவரை வீழ்த்துவதில் அரசியல் களத்தில் – இன்றைக்கும் தனது 90 வயதிலும் – முன்னணியில் நிற்கும் அவரது துணிவுதான்.
தனது மகன் கெடா மந்திரி பெசாராக இருந்தாலும், பெட்ரோனாஸ், புரோட்டான் சாகா போன்ற அரசு நிறுவனங்களின் ஆலோசகராகத் தான் செயல்பட்டு வந்தாலும், தயங்காமல், தயவு தாட்சண்யமின்றி, பிரதமருக்கு எதிரான அதிரடித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றார் மகாதீர்.
1எம்டிபி-நஜிப்பின் அரசியல் தவறுகள்-அவரது ஆடம்பர வாழ்க்கை-அவரது மனைவி ரோஸ்மாவின் அரசியல் தலையீடு-ரோஸ்மாவின் ஆடம்பரத்தனம்- இப்படிப் பல விவகாரங்களை நஜிப்புக்கு எதிராக ஒருமுகப்படுத்தி – நஜிப்பை வீழ்த்தும் தனது போராட்டத்தை மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்துச் சென்றதில் முன்னணி வகித்தவர் மகாதீர்தான்.
பல தலைவர்களை உருவாக்கினார் – வீழ்த்தினார்
தனது தலைமைத்துவத்தில் துணைப் பிரதமர்களாக இருந்த துன் மூசா ஹீத்தாம், துன் கபார் பாபா, நிதியமைச்சராக இருந்த துங்கு ரசாலி ஹம்சா, ஆகியோரை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதில் வெற்றி கண்டவர் மகாதீர்.
அவரது உச்சகட்ட ஒழிப்பு அன்வார் இப்ராகிம்தான். ஆனால், அவர் செய்த அந்த ஒரு தவறுதான் இன்று அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகப் பிகேஆர் கட்சியாகவும் – தேசிய முன்னணியையே பொதுத் தேர்தல் களத்தில் வீழ்த்தும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சிக் கூட்டணியாகவும் உருவெடுத்து நிற்கின்ற காரணமாகி விட்டது.
அப்துல்லா படாவி, நஜிப் ஆகியோர் பின்னாளில் பிரதமர்களாகப் பதவியில் அமர்ந்ததற்கும், மொய்தீன் யாசின் துணைப் பிரதமராக இன்று உலா வருவதற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரும் மகாதீர்தான்.
90வது வயதில், தனது வாழ்வின் இறுதிக் கட்ட இலக்காக, சபதமாக – நஜிப்பை வீழ்த்தும் அரசியல் வியூகத்தை உருவகப்படுத்தி – ஒருமுகப்படுத்தி – செயல்படுத்தியும் உள்ள மகாதீர் அதன் விளைவுகளை – விடைகளை இன்னும் சில நாட்களில் – அல்லது சில வாரங்களில் மலேசிய மக்கள் மன்றத்தில் முன்வைப்பார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆம்! நஜிப் கூடியவிரைவில் பதவி விலகுவார் என்பது ஏறத்தாழ உறுதியான ஒன்றாகிவிட்டது.
இன்று தனது பிறந்த நாளில் எத்தனையோ பரிசுப் பொருட்கள் குவிந்தாலும் – நஜிப் பதவியை விட்டு விலகினார் என்பதே மகாதீரைப் பொருத்தவரை – அவரது 90வது வயதில் அவருக்குக் கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசாகக் கருதுவார் என்பது திண்ணம்!
-இரா.முத்தரசன்