கடந்த டிசம்பர் 4-ம் தேதி இரவு ஜெயலலிதாவிற்கு இதயத் துடிப்பு முடங்கியதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். டிசம்பர் 5 -ம் தேதி அவரது நிலைமை மோசமடையத் தொடங்கவே அன்றைய நாளே அமைச்சர்கள் கூடி முதலமைச்சர் பதவி உட்பட அதிகார பரிமாற்றங்கள் குறித்த முடிவுகளை எடுத்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவி தற்போது யாருக்கு வழங்கப்படவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக-வின் உயரிய பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு வர சசிகலாவிற்கும், மக்களவை சபாநாயகர் தம்பிதுரைக்கும் இடையே தற்போது போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளையில், ஓ.பன்னீர் செல்வமே பொதுச்செயலாளராகவும் பதவி வகிக்கட்டும் என்று ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இது குறித்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கவுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
ஒருவேளை சசிகலா போட்டியிட முடியவில்லை என்றால் நடராஜனே அத்தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும், இல்லையென்றால் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அத்தொகுதியில் நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்கு போயஸ் கார்டனில் சில சலுகைகளை வழங்கியுள்ளார் சசிகலா. அதனால் தான் அவரால் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யும் இடம் வரை சென்று இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிந்தது என்கின்றனர் அதிமுகவிற்கு நெருக்கமானவர்கள்.
அதேநேரத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எவ்வளவோ முயற்சி செய்தும் இறுதி வரை ஜெயலலிதாவை அவர் நெருங்க அனுமதிக்கவில்லை சசிகலா தரப்பு. அதன் காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
எனவே, இன்னும் ஒரு சில நாட்களில் பொதுச்செயலாளர் பதவி, ஆர்.கே.நகர் தொகுதியில் யாரை நிறுத்துவது போன்ற தகவல்கள் வெளிவரலாம். அதற்குப் பிறகு ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தமானது என்கின்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-செல்லியல் தொகுப்பு