Home Featured தமிழ் நாடு “வீட்டுக்கு வாருங்கள்.. கொடநாடு தேநீர் தருகிறேன்” – ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!

“வீட்டுக்கு வாருங்கள்.. கொடநாடு தேநீர் தருகிறேன்” – ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!

748
0
SHARE
Ad

apollow

சென்னை – அப்போலோவில் தீவிர சிகிச்சை எடுத்த சமயத்தில் ஜெயலலிதா தன்னைப் பராமரித்த மருத்துவர்களிடமும், தாதிகளிடமும் மிக சகஜமாகப் பேசியுள்ளார்.

நேற்று புதன்கிழமை அப்போலோ மருத்துவர்களும், தாதிகளும் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தினர்.

#TamilSchoolmychoice

அதில் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அந்த 73 நாட்கள் குறித்து அவர்கள் ஒவ்வொருவரும் பல கதைகளைப் பகிர்ந்தனர்.

தினமும் தன்னைப் பராமரிக்க வரும் மூன்று துணிச்சலான தாதிகளான ஷீலா, ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகியோரை அவர் ‘கிங் காங்’ என ஆசையோடு அழைத்துள்ளார்.

“எத்தனையோ முறை, ‘உனக்கு என்ன வேண்டும் சொல்.. நான் செய்கிறேன்’ என்று சொன்னார்” என்று தாதிகளில் ஒருவரான சி.வி.ஷீலா தெரிவித்தார்.

“எப்போதும் நாங்கள் அவரது அறைக்குள் நுழையும் போது புன்னகைப்பார். எங்களுடன் உரையாடுவார், பெரும்பாலான நேரங்களில் ஒத்துழைப்பு கொடுத்தார். அவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் சாப்பிட முயற்சி செய்தார். எங்களிடம் ஆளுக்கு ஒருவாய் உணவு வாங்கிவிட்டு, தானும் ஒருவாய் உணவு எடுத்துச் சாப்பிடுவார்” என்று ஷீலா கூறினார்.

அவரது தினசரி உணவில் அவரது தேர்வின் படி, பொங்கல், உப்புமா அல்லது தயிர் சாதம் மற்றும் உருளைக் கிழங்கு குழம்பு வழங்கியிருக்கிறார்கள்.

அதோடு, தினமும் 3 ஷிப்டுகள் என்ற வகையில் 16 தாதிகள் குழு அவரைக் கவனித்துள்ளனர். அதில் ஷீலா, ரேணுகா, சாமுண்டீஸ்வரி ஆகிய மூவரையும் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்துள்ளது.

அப்போலோ காபியை விரும்பாத ஜெயலலிதா

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, கடுமையான அசௌகர்யம் காரணமாக ஜெயலலிதா அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 4 மணி நேரத்திற்குப் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி கண் விழித்தவுடன் சான்விட்சும், காபியும் கேட்டார் என்றார் அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் குழுவிற்கு தலைமைவகிக்கும் டாக்டர் ஆர்.செந்தில் குமார்.

அவர் அசதியாக இல்லாத நாட்களில் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தோல் பராமரிப்பு குறித்து அவ்வப்போது ஆலோசனைகள் தருவார். சில நேரங்களில் அவர்களின் சிகை அலங்காரத்தை மாற்ற வேண்டும் என்று கட்டளையிடுவார் என்றார் மருத்துவ இயக்குநர் டாக்டர் சத்ய பாமா.

அப்போலோ மருத்துவமனையின் காபியில் அவருக்கு விருப்பம் இல்லை. ஒருநாள், அப்போலோ மருத்துவர்களும், தாதிகளும் போயஸ் கார்டன் வரும்படியும், கொடநாட்டின் சிறந்த தேநீரை வழங்குவதாகவும் ஜெயலலிதா கூறியதாக அவசர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் கூறினார்.

அதோடு, கடந்த நவம்பர் 22-ம் தேதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றியடைந்த செய்தியை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்து ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்து புன்னகைத்ததாக மருத்துவர்கள் நினைவு கூறினர்.

அதோடு, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஜெயலலிதாவிற்கு சிகிச்சையோடு, அவ்வப்போது வேடிக்கையாகப் பேசி ஆறுதலும், ஊக்கமும் அளித்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துரதிருஷ்டவசமான அந்த ஞாயிறு மாலை

எல்லாம் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஞாயிறு மாலை எல்லாம் திடீரென மாறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொலைக்காட்சியில் பழைய தமிழ் நெடுந்தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவைப் பார்க்க மருத்துவ நிபுணர் ஒருவர் அவரது அறைக்குச் சென்ற போது, ஜெயலலிதா சிரிக்கவோ, பேசவோ இல்லை. அவர் பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டுள்ளார். உடனடியாக அம்மருத்துவர் செயற்கை சுவாசக் கருவியையும், திரையையும் பார்த்த போது அது ஒரே நேர் கோடாகக் காணப்பட்டுள்ளது.

‘ஜெயலலிதாவிற்கு இதயத் துடிப்பு முடங்கி இருந்தது’ என்றனர் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

திங்கட்கிழமை ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து தற்போது அப்போலோ மருத்துவமனையில் சோகமும், அமைதியும் நிலவி வருகின்றது.

“தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு எங்களை அழைத்துச் செல்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்” என்று தாதி ஷீலா உடைந்த குரலில் கூறினார்.

தகவல்: நன்றி – டைம்ஸ் ஆஃப் இந்தியா