Home உலகம் கிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது

கிரிக்கெட் : 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது

1376
0
SHARE
Ad

மான்செஸ்டர் (இங்கிலாந்து) – நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட்டின் பரம வைரிகளான இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது.

மழையின் இடையூறு அடிக்கடி இருந்தாலும், ஆட்டம் முழுமையாக நடைபெற்று முடிந்தது கிரிக்கெட் இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நாணயத்தைச் சுண்டிப்போட்டதில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 50 ஓவர்களையும் நிறைவு செய்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 336 ஓட்டங்கள் எடுத்தது.

#TamilSchoolmychoice

இடையில் மழையினால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டாலும், இந்தியா தொடர்ந்து ஆடி 50 ஓவர்களையும் நிறைவு செய்தது. ரோஹிட் ஷர்மா அபாரமாக விளையாடி 140 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் தலைவர் வீராட் கோலியும் 77 ஓட்டங்கள் குவித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு நகர்த்தினார்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான், இரண்டாவது பாதி ஆட்டத்தில் 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. மழையின் இடையூறு காரணமாக தலா 40 ஓவர்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் உலகக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது.
கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது பாகிஸ்தான் மீதான இன்னொரு தாக்குதல் என பாஜக தலைவரும் அமைச்சருமான அமித் ஷா வர்ணித்திருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை (ஜூன் 17) நடைபெறும் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வங்காள தேசமும் மோதுகின்றன.