
கோலாலம்பூர்: மலாய்க்காரர் ஒற்றுமை, மலாய்க்காரர் ஆட்சி என்று பேசி பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என நினைத்துக் கொண்டு தனது மாண்பினை தாமே கெடுத்துக் கொண்டு வருபவராக துன் மகாதீர் நடந்து கொள்கிறார். முப்பது ஆண்டுகாலம் நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து, இறைவன் அருளால் நூறு ஆண்டுகள் நம்மோடு வாழும் ஒரு தலைவர் நாட்டு மக்கள் போற்றப்படும் ஒரு தலைவராக நடந்துகொள்ள வேண்டுமேயொழிய நாட்டு மக்களால் பழிக்கப்படும், தூற்றப்படும், வெறுக்கப்படும் தலைவராக செயல்படக்கூடாது” என தான்ஸ்ரீ க.குமரன் இன்று சனிக்கிழமை(ஜூன்7) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், துன் மகாதீரின் தலைமையின் கீழ் பத்தாண்டுகள் அரசாங்கத்தில் பணியாற்றியபோது அவருடைய சிறந்த தலைமைத்துவத்தை கண்டு வியந்து மரியாதை கொண்டிருந்ததாகவும் இன்று அவருடைய நன்றி மறந்த, மற்ற இனங்கள்மீது கொள்ளும் வெறுப்பை நினைக்கும்போது மனம் வருந்துவதாகவும் குமரன் குறிப்பிட்டார்.
“துங்குவின் தலைமையிலான அம்னோ-அலையன்ஸ் கூட்டணியால் 1964,1969 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, 1969-வது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் துங்குவை வசை பாடியதுடன் அறிக்கைகள் விட்டதால், கட்சியைவிட்டு மகாதீர் நீக்கப்பட்டார். மே 13 இனக்கலவரம், நாடாளுமன்றம் இடை நீக்கம், பாரிசான் நேசனல் தோற்றம், துன் அப்துல் ரசாக்கால் மீண்டும் அம்னோவில் இணைந்து, நாடளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பதவிகள் பெற்றது, துங்கு ரசாலி, துன் கபார் பாபா இருவரையும் பின்தள்ளி மூன்றாவது நிலை உதவித் தலைவராக இருந்த மகாதீர் துணைப் பிரதமராகி இறுதியில் பிரதமராகி 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர். இந்த அளவிற்கு உயர்ந்து பிரதமராக வருவதற்கு ஏணிப்படியாக இருந்த அம்னோவை தோற்கடித்து வேறு கட்சி அமைத்து ஆட்சியை நடத்தியவர். தன்னால் மேம்படுத்தப்பட்ட லங்காவி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் இன்று மலாய்க்காரர் ஒற்றுமையில் இணைந்துகொள்ள அம்னோவிற்கு அழைப்பு விடுப்பதை பார்க்கும்போது அவரது குறுகிய அரசியல் நோக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது” என்றும் குமரன் தனது அறிக்கையில் மகாதீரைச் சாடினார்.
அம்னோ-மசீச-மஇ கா கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்று இனங்களையும் ஒன்றிணைத்து 1955-ஆம் ஆண்டு கூட்டரசு சட்டமன்ற தேர்தலில் 52 இடங்களில் 51 இடங்களை வென்று சாதனை படைத்தது. 31.8.1957-இல் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கூட்டணியில் இருக்கும் சீனர்களையும் இந்தியர்களையும் ஒதுக்கிவிட்டு அகண்ட மலாய்க்காரர் கூட்டணியில் இணைய அம்னோவிற்கு துன் மகாதீர் விடுத்த அழைப்பிற்கு ‘மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன’ என அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் பதிலடி கொடுத்திருக்கிறார். மகாதீரின் மலாய் ஒற்றுமை அழைப்பை இளைஞர் பகுதி அம்னோ தலைவர் அக்மால் மறுத்திருக்கிறார். இந்த வேளையில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் “மலாய்க்கார சமூகத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஒரு தளமாக ஒரே பரந்த கூட்டணியின் கீழ் மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையவேண்டும். பிளவு பட்டிருக்கும் சமூகத்தை ஒன்றிணைக்கும் தளமாக மகாதீரின் ஒற்றுமைக் கூட்டணி அமையும் என்ற செய்தியையும் இந்திய அரசியல் தலைவர்கள் சிந்தித்து சீர்தூக்கி செயல்பட வேண்டும்” என்று குமரன் கேட்டுக்கொண்டார்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இநாட்டு மக்கள் தொகையில் எழுபது விழுக்காடாக இருக்கும் பூமிபுத்ராக்களின் உரிமை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் மாநில, தேசிய அரசியலில் பினாங்கு மாநிலம் தவிர மற்ற மாநிலங்களிலும் தேசிய அளவிலும் மலாய்க்காரர்களே ஆட்சியிலும், அரசாங்கத்திலும் பொறுப்பில் இருக்கும்போது, மீண்டும் மீண்டும் மலாய்க்காரர்கள் ஒன்று படவேண்டும் என்று கூறும்போது, நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்தியர்களின் எதிர்காலாம் குறித்து அச்சம் எழுவதாகவும் குமரன் குறிப்பிட்டார்.
“மலாய்க்காரர்களின் பரந்த ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள். இந்தியர்கள் ஆளும் கட்சிக்கு உள்ளே, வெளியே இருந்து ஆதரவு என்று கூறி அரசியல் நடத்துகின்றனர். சென்ற பொதுத் தேர்தலில் ஆதரவு கட்சிகள் மூன்றிற்கு கொடுத்த தொகுதிகளில் இரண்டில் பிரதமர் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா என்ற நிலையில் அமைந்த தொகுதிகள். ஆரம்ப காலத்தில் மலேசிய வாக்காளர்கள் இனம் பார்த்து வாக்களித்ததில்லை. சின்னத்தை பார்த்துத்தான் வாக்களித்தனர். மே13 இனக் கலவரத்திற்குப்பின் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதார் என்று குடிமக்களை வகைப்படுத்தியதும் இன உணர்வை தலைதூக்க வைத்து, அது இன்று உச்சத்திற்கே சென்றுவிட்டது” என்றும் குமரன் சுட்டிக் காட்டினார்.
“சில தொகுதிகளில் இந்தியர்கள் வாக்குகள்தான் வெற்றியை முடிவு செய்யும் வாக்குகள் என்று கூறினோம். இப்போதும் கூறுகிறோம். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்தியர் அல்லாத ஒருவர் போட்டியிட்டால் அவ்வாறு நடக்கலாம். மூன்று பொதுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1990 பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, எனக்கு முன் தாப்பா தொகுதியில் தான்ஸ்ரீ பண்டிதன் போட்டியிட்டிருந்ததால் அவருடைய ஆதரவாளர்கள், அதே பொதுத் தேர்தலில் தான்ஸ்ரீ சுப்ரமணியத்திற்கு போட்டியிட வாய்ப்பளிக்காததால் அவருடைய ஆதரவாளர்கள், டத்தோ பொன்னுசாமிப் பிள்ளையின் தலைமையை எதிர்த்து வென்றதால் அவரது ஆதரவாளர்கள், ஜனநாய செயல் கட்சினர் அனைவரும் தம்மை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த போதிலும், அவற்றைக் கடந்து இரண்டு முறை வெற்றிப் பெற்றேன” என குமரன் தான் கடந்து வந்த அரசியல் பாதையை நினைவு கூர்ந்தார்.
“பன்னிரண்டு விழுக்காடாக இருந்த இந்தியர் மக்கள் தொகை 6.5 விழுக்காடாக சரிந்துள்ள நிலையில் இந்திய அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பக்காத்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களின் அரசியல் உரிமையை நிலை நாட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன், எம்.ஐ.பி.தலைவர் திரு வேதமூர்த்தி ஐ.பி.எப்.தலைவர் டத்தோ லோகநாதன், பி.பி.பி.தலைவர் டத்தோ லோகபாலன், அகியோருடன், ஆளும் கட்சியை ஆதரிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருநாள், இருநாள் அல்ல – ஒருமாதமானாலும் விளம்பரம் இல்லாமல் கூடிப் பேசுங்கள். இந்த சமுதாயத்தின் அரசியல் எதிர்காலம் நமது ஒற்றுமையில், அரசியல் கட்சித் தலைவர்களான உங்கள் புரிந்துணர்வில்தான் இருக்கிறது” என்று நினைவூட்டிய தான்ஸ்ரீ குமரன் “தும்பைவிட்டு வாலைப்பிடிக்காமல் விரைந்து செயல்படும்ம்படி” அனைத்துத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டார்.