கிள்ளான்: நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கிள்ளான், தஞ்சோங் ஹாரப்பான் கடல் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் இருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தீயணைப்பு, மீட்புப் படை அறிவித்துள்ளது. விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்த படகு மீட்கப்பட்டு, கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டபோது அந்த இருவரும் வலுவான கடல் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் கருதுவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
காணாமல் போன இருவரும் கணவன்-மனைவி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான படகு மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கவிடப்பட்டாலும், அந்தப் படகு பரிசோதனைக்காகவும், தொழில்நுட்ப சோதனைகளுக்காகவும் போர்ட் கிள்ளான் கடல்துறை காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்ததில், 3 வயதான குழந்தை உட்பட மூன்று பேர் மரணமடைந்தனர். அந்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்தப் படகில் இருந்த 17 வயது அல்வின் சாங் யான் குயின் மட்டுமே அந்த விபத்தில் உயிர் பிழைத்தார்.
அந்தப் படகில் இருந்த அனைவரும் சீன சமூகத்தினராவர். படகில் இருந்த பயணிகள் நீரில் மூழ்காமல் இருப்பதற்கான பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் இருந்தது அவர்களின் மரணத்திற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.