ஷா ஆலாம்: நேற்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாம் ஐடிசிசி மண்டபத்தில் (நவம்பர் 16) மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற மஇகாவின் 79-வது தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பேராளர்கள் மஇகா, தேசிய முன்னணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எனினும் எப்போது தேசிய முன்னணியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறுவது, எந்தக் கூட்டணியில் அடுத்து சேர்வது, மஇகாவுக்காகவும் இந்திய சமுதாயத்திற்காகவும் புதிய கூட்டணியில் எத்தகைய சாதகமான பலன்களைப் பெறுவது என்பது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து முடிவெடுக்க மஇகா தேசியத் தலைவருக்கும் மத்திய செயலவைக்கும் அதே தீர்மானத்தின் மூலம் பேராளர்கள் அதிகாரம் தந்தனர்.

இந்தத் தீர்மானத்தை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் பேராளர்களிடையே முன்மொழிந்து அதற்கான விளக்கங்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து சில பேராளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் தீர்மானத்தை பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மஇகா தேசியப் பொதுப் பேரவையின் முடிவைத் தொடர்ந்து தேசிய முன்னணியுடனான மஇகாவின் சுமார் 70 ஆண்டுகால அரசியல் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. பெரிக்காத்தான் கூட்டணியில் இணைவது பொருத்தமாக இருக்கும் என்ற ரீதியில் கட்சித் தலைவர்கள் மற்றும் பேராளர்கள் தங்கள் விவாதங்களை முன்வைத்தனர்.
இதற்கிடையில், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் மஇகா மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்து தெரிவித்து, பூங்கொத்து ஒன்றைத் தனது இந்தியப் பிரிவின் செயலாளர் சண்முகம் மூக்கன் மூலம் அனுப்பியிருந்தார்.





