Home இந்தியா ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் பதிலடியால் பதற்றம்!

ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் பதிலடியால் பதற்றம்!

469
0
SHARE
Ad

6சென்னை, ஆகஸ்ட் 19- போயஸ் தோட்டத்தில் மோடி- ஜெயலலிதா சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டித்து அதிமுக-வினர் நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டுக் கோஷம் எழுப்பியபடி, அவரது உருவப் பொம்மையை வாசலில் போட்டுக் கொளுத்தினர்.

மேலும், துடைப்பத்தாலும் செருப்பாலும் அவரது உருவப் படத்தை அடித்து அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இப்படிப்பட்ட கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நேற்று சென்னையில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதிலும் நடந்தது. இன்று அந்தப் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

#TamilSchoolmychoice

சென்னையில் இன்று அதிமுக-வினர் கைபேசிக் கோபுரத்தில் ஏறிப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் ராஜீவ் காந்தி கைபேசிக் கோபுரத்தில் அதிக நேரம் நின்று போராடியதால் மயக்கமானார்.அவரைத் தீயணைப்புத்துறையினர் வந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதற்கிடையில் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் வந்து அதனைத் தடுத்து ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை எடுத்து சென்றுவிட, காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள்ளேயே ஜெயலலிதாவின் உருவ பொம்மையைத் தீயிட்டு எரித்தனர்.ஜெயலலிதாவிற்கு எதிராகக் கோஷமிட்டனர்.

இச்சம்பவங்களால் சத்தியமூர்த்தி பவன் வளாகம் பதற்றமாகக் காணப்படுகிறது. பாதுகாப்புக் கருதி ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.