Home நாடு எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் -வழிகாட்டி நூல்

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் -வழிகாட்டி நூல்

2896
0
SHARE
Ad

எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம் -வழிகாட்டி நூல்

இந்நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, படிவம் ஐந்தில் ஒரு தேர்வுப் பாடமாகத் தமிழ் இலக்கியம் இடம்பெற்று வருகிறது. தமிழ்ப்பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்று தமிழ்க்கல்வி பெற்ற மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழோடு தமிழ் இலக்கியத்தையும் பயிலும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர் எண்ணிக்கை 1990களில் மிகவும் குறைந்து, இந்தப் பாடம் தேர்வுப்பாடப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியர்களும் சமூக இயக்கங்களும் மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகமும் (இலக்கியகம்) முழு மூச்சாக முயன்றதால் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. கடந்த ஆண்டு, இலக்கியகத்தின் முயற்சியால் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மூலம் அரசின் உதவிபெற்று இலக்கியப் பாட நூல்கள் இரவல் முறையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

spmஇந்த ஆண்டு, எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய பாடநூல்கள் பற்றிய வழிகாட்டி நூல் வெளிவந்துள்ளது. இலக்கியம் கற்பதிலும் கற்பித்தலிலும் உள்ள சிரமத்தைக் கருத்திற்கொண்டு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவும் நோக்கில் இந்த இலக்கிய வழிகாட்டி நூல் தயாராகியுள்ளது. இந்நூலை இலக்கிய ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார். புதுக்கவிதை, ஹைக்கூ, இலக்கியக் கட்டுரை என இலக்கியப் பரப்பில் தன் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் ந.பச்சைபாலன், எஸ்.பி.எம். மாணவர்களுக்காக ஏடுகளில் இலக்கியப் பாடக் கட்டுரைகளைப் படைத்து வருகிறார். நாடளாவிய நிலையில் மாணவர்களுக்கு இலக்கியப் பாடத் தேர்வுப் பயிலங்குகளையும் நடத்தி வருகிறார். ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் விரிவான விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

தேர்வுத்தாள் அமைப்பு பற்றிய விளக்கமும் மாதிரிக் கேள்விகளும் விடைகளும் சிறந்த பயனைத் தரும். தேர்வுக்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளதால், இந்நூல் மாணவரையும் ஆசிரியரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. 2015வரை உள்ள புதிய இலக்கியப் பாட நூல்களையொட்டிய இந்த வழிகாட்டி நூலைத் தற்போது படிவம் மூன்று முதல் ஐந்துவரை பயிலும் மாணவர்கள் பெற்றுப் பயன்பெறலாம்.

304 பக்கங்களில் அழகிய வடிவமைப்பில் குறைந்த விலையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சமுதாயப் பணிகளில் முனைப்புக் காட்டும் சமூக இயக்கங்கள் மனம் வைத்தால் நம் மாணவர் சமூகத்திற்கு இந்நூலை இலவசமாக வழங்க முடியும்.

இதனைப் பெற விழைவோர் 012 6025450 (ந.பச்சைபாலன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஜாசின் ஏ.தேவராஜன்