Home Featured தமிழ் நாடு ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார் சசிகலா!

ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார் சசிகலா!

777
0
SHARE
Ad

sasikala-panneer selvam

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும் உரிமை கோரினார்.

ஆளுநருடனான அவரது சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அவருடன் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

இதுவரையில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று சசிகலா சமர்ப்பித்த சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் 126 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அவர்களில் யாரும் சசிகலாவுடன் வரவில்லை. அவர்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நாளை புதுடில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கும் வழக்குகளின் பட்டியலில் சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்குக்கான தீர்ப்பு இடம் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து அடுத்து திங்கட்கிழமைதான் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு மீதிலான தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அதுவரையில் ஆளுநர் காத்திருப்பாரா, அல்லது அதற்கு முன்பாகவே, சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்பதைத் தெரிந்து கொள்ள தமிழகமே ஆவலுடன் தற்போது காத்திருக்கிறது.

-செல்லியல் தொகுப்பு