Home One Line P2 உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி உதவியை டிரம்ப் நிறுத்தினார்

உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி உதவியை டிரம்ப் நிறுத்தினார்

634
0
SHARE
Ad

வாஷிங்டன் – கொவிட்-19 பாதிப்புகளுக்கு காரணம் ஐ.நா.வின் கீழ் இயங்கும் உலக சுகாதார நிறுவனம்தான் என ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புக்கான அமெரிக்காவின் நிதி உதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதி உதவிகளை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“தனது அடிப்படைக் கடமைகளில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டது. கொவிட் -19 பரவலுக்கு அதுவே பொறுப்பேற்க வேண்டும். சீனா வழங்கிய தவறான தகவல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் இந்த உலகப் பிரச்சனைக்கு அந்த அமைப்புதான் காரணம்” என்று சரமாரியாக டிரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார நிறுவனத்திற்கு 2019 ஆண்டில் மட்டும் அமெரிக்கா 400 மில்லியன் டாலர்களை வழங்கியிருக்கிறது. அந்த அமைப்பில் மொத்த வரவு செலவில் இது சுமார் 15 விழுக்காடு பங்களிப்பாகும்.

டிரம்பின் முடிவுக்கு அமெரிக்காவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமெரிக்க மருத்துவ சங்கம் “இது தவறான திசையில் எடுக்கப்பட்டிருக்கும் ஓர் அபாயகரமான நடவடிக்கை. இதன் மூலம் கொவிட்-19 எதிரான போர் மேலும் சிரமங்களை எதிர்நோக்கும்” என எச்சரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் அமெரிக்காவில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 25,700 -ஐத் தாண்டியது.

பாதிப்புகளின் எண்ணிக்கை 600,000 ஆக உயர்ந்திருக்கிறது.

இவை தவிர கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளும் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கிறது.