Home இந்தியா கொவிட்  -19 கையாண்ட விதத்தில் இந்திய அரசாங்கம் – பிரதமர் மோடி மீதான செல்வாக்கு அதிகரிப்பு

கொவிட்  -19 கையாண்ட விதத்தில் இந்திய அரசாங்கம் – பிரதமர் மோடி மீதான செல்வாக்கு அதிகரிப்பு

687
0
SHARE
Ad

(கொவிட்-19 விவகாரத்தை இந்திய அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் கையாண்டு வரும் விதம் குறித்து திருப்தி நிலவுவதாகவும் செல்வாக்கு பெருகியிருப்பதாகவும் முன்னாள் இந்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் கல்ப் நியூஸ் (Gulf News) ஊடகத்திற்கு கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி பிரத்தியேகமாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. அக்பர் பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார்)

இந்தோ-ஆசிய செய்தி சேவை நிறுவனம் (ஐஏஎன்எஸ்) கடந்த ஏப்ரல் 23 அன்று அதன் கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டது. அதில், மார்ச் 25 அன்று 76.8% ஆக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆதரவு  ஏப்ரல் 21 அன்று 93.5% ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டிருந்தது.

இந்தக் கணக்கெடுப்பு சிலருக்கு மட்டுமே ஆச்சரியமாக அமைந்தது. அனைவருக்கும் அல்ல.

#TamilSchoolmychoice

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் 93.5 விழுக்காடு ஒப்புதல் பெறுவது புள்ளிவிவர ரீதியாக சாத்தியமற்றது. அவர்கள் மக்கள் தொகையில் 14.5 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள், இந்துக்கள் 80 விழுக்காட்டினர் ஆவர்.

இந்திய அரசுக்கு மக்கள் வழங்கிய ஆதரவுக்குப் பலனாக அரசு மக்களுக்கு உதவுகிறது. மதம், சாதி அல்லது பிராந்திய வேறுபாடுகள் இன்றி மக்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதற்றமான சூழ்நிலையில் வெளிப்பட்ட இந்த உண்மை  கருத்து வேறுபாட்டின் குரலால் மறைக்க முடியாத உண்மையாகும்.

சாதாரண இந்தியக் குடிமக்கள் உயர்மட்ட மக்களை விட அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், அவர்கள் பகுத்தறியும் திறன் படைத்தவர்கள்.  அவர்கள் அன்றாட வாழ்க்கையின் சான்றுகளால் தீர்ப்பளிக்கிறார்கள்; அரசியல் விவாதம் அல்லது தொலைக்காட்சி தாக்கத்தால் முடிவெடுப்பதில்லை.

ஒரு தொற்றுநோயை நிறுத்த முற்படும்போது 1.3 பில்லியன் குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டின் நிர்வாகத்தைப் பற்றிய சில புள்ளிவிவரங்கள் இதோ:-

* பொருளாதார பிரமிட்டின் கோட்டின் கீழ் இருக்கும் 300 மில்லியன் பேரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் பிரதமரின் வறுமை நலத்திட்டத்திலிருந்து ரூ .31,235 கோடி செலுத்தப்பட்டது.

* சுமார் 200 மில்லியன் பெண்களுக்கு ரூ.10,025 கோடி வழங்கப்பட்டது.

* 80 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ16,146 கோடி சென்றடைந்தது.

* கட்டுமானத்துறையின் 217 மில்லியன் தினசரி கூலிகளுக்கு ரூ 3497 கோடி விநியோகிக்கப்பட்டது.

* கிட்டத்தட்ட 400 மில்லியன் பேருக்கு இலவச ரேஷன்கள் கிடைத்தன. சுமார் 27 மில்லியன் வீடுகளுக்கு இலவச எரிவாயு கொள்கலன்கள் (சிலிண்டர்கள்) கிடைத்தன.

இவ்வாறு அரசாங்கத்தின் உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மோடி ஏழைகளுக்கான வங்கிக் கணக்குகளை உறுதி செய்யாவிட்டால், ஊழல் மிக்க இடைத்தரகர்களின் இடையூறு இன்றி இந்த உதவிகள் இத்தனை விரைவாக மக்களைச் சென்றடைய சாத்தியமில்லை. நெருக்கடியான சூழலில் இந்த மின்னிலக்க (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு இன்றியமையாததாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

மேலும் சில உண்மைகள்…

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியா தயாராக இல்லை என்று ஏப்ரல் 10 அன்று மிகவும் மதிப்பிற்குரிய மேற்கத்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

ஏப்ரல் 26 வாக்கில் அமெரிக்காவில் 50,000-க்கும் அதிகமானோரும் பிரிட்டனில் 20,000-க்கும் அதிகமானோரும் இறந்தனர். இந்தியாவின் மக்கள் தொகை அமெரிக்காவை விட நான்கு மடங்கு மற்றும் இங்கிலாந்தை விட 12 மடங்கு அதிகமாகும்.

தொற்றுநோயைத் தடுக்க முகக் கவசம் தேவை. ஆனால் டெல்லியில் இருக்கும் வெளிநாட்டு நிருபர்கள் இச்செய்திகளைக் கண்டும் காணாமல் இருக்க கண்ணுக்கும் முகமூடி இட்டுக் கொண்டார்கள் போல.

இந்த நெருக்கடியின் போது பிரதமர் தனது நிருவாகத் தத்துவத்தை உரைகளிலும் கட்டுரைகளிலும் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 19 அன்று அவர் எழுதிய “கொவிட்  -19″ கட்டுரையில் இந்த நோய் தாக்கமானது இனம், மதம், நிறம், சாதி, மதம், மொழி அல்லது எல்லைகளைக் கடந்து தாக்குகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆகையால், ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்தோடும் இருங்கள் எனவும் கூறியிருந்தார்.

கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கம்

ரமடான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்த செய்தியில் அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார். இந்த புனித மாதம் அதனுடன் ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தைக் கொண்டு வரட்டும் எனக் கூறினார்.

மேலும், பொறுமை, சேவை மற்றும் “இபாதத்” ஆகியவற்றை நாடினால் கொவிட்-19 தொற்று நோய் நோன்பு பெருநாளுக்கு முன்னர் முடிவடையும் என்று ஏப்ரல் 26-ஆம் தேதி விடுத்த ஒரு பொது உரையில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு சமய நம்பிக்கையினரும் பொது நடைமுறையை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். ரமடானின்போது மசூதிகள் மூடப்பட்டுள்ளன. ஈஸ்டர் காலத்தில் தேவாலயங்கள் மூடப்பட்டன.

ஏப்ரல் 25-26 வார இறுதி நாட்களில் திருமணத்தின் கொண்டாட்டங்கள்  சத்தமாக இருந்திருக்கும், ஏனெனில் அது அக்ட்சய திரிதியை காலகட்டம்.

ஆனால் அன்று இந்தியாவே அமைதியாக இருந்தது.

அனைத்து கொண்டாட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவர் கவனமாக இல்லாவிட்டால் தீ, கடன்கள் மற்றும் நோய் எப்போதும் திரும்பும் என ஒரு பண்டைய இந்திய நம்பிக்கை சொல்கிறது.

எனவே, இந்தத் தொற்றை ஒழித்துக் கட்டி விட்டோம் என்ற மனநிறைவை மட்டும் நாம் எப்போதும் கொண்டிருக்கக் கூடாது, அதுவுமே மிகவும் ஆபத்தான வைரஸ் என நமக்கு நினைவூட்டியிருக்கிறார் நரேந்திர மோடி.

நன்றி: Credit – Gulf News