![](https://selliyal.com/wp-content/uploads/2020/05/Palaniswami-edappadi-30052020.jpg)
சென்னை : அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்தும் எடப்பாடி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அதனை விசாரிக்கும்படி மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த விவகாரம் உட்கட்சி விவகாரம் என்பதால் – அதனை விசாரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என தடை உத்தரவைப் பெற்றார்.
இன்று புதன்கிழமை (பிப்ரவரி 12) நடைபெற்ற விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான சி.வி.சண்முகத்தின் கூற்றுப்படி தேர்தல் ஆணையம் அவ்வாறு விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பின்னர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பல்வேறு மாற்றுக் கருத்துகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. எனினும் இப்போதைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்திற்கோ, இரட்டை இலை சின்னத்திற்கோ, பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.