லண்டன், ஜூலை 9- உலகெங்கும் வாழும் பிரபலங்கள் தங்களது அன்றாட நிகழ்வுகளை அபிமானிகளுடன் ‘டுவிட்டர்’ மூலம் பகிர்ந்துக் கொள்கின்றனர். இவற்றை அறிந்துக்கொள்ள லட்சக்கணக்கான அபிமானிகள் டுவிட்டரில் தவம் கிடக்கின்றனர்.
உள்ளூர் திருமண ஏற்பாட்டாளரில் தொடங்கி வைர வியாபாரிகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்திராத நபர்களே இல்லை என்னும் அளவுக்கு இன்று ‘சர்வமும் டுவிட்டர் மயம்’ என்றாகி விட்டது.
எனினும், இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த யாரும் இதுவரை டுவிட்டரில் இணைந்தது கிடையாது.
அவர்களின் பெயர்களில் போலியாக சிலர் டுவிட்டரில் கணக்கை தொடங்கி ‘கன்னா பின்னா’ என்று ஏதேதோ உளறி வந்தாலும், இவை அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பது பலருக்கும் தெரியும்.
இந்நிலையில், இங்கிலாந்து விமானப்படையில் 22 ஆண்டு காலமாக பணியாற்றிய இளவரசர் ஆண்ட்ரு அரச வம்சத்தின் முதல் வாரிசாக தற்போது டுவிட்டரில் தடம் பதித்துள்ளார்.
அரியணைக்காக காத்திருக்கும் வாரிசுகளில் 4வது வாரிசாக இருக்கும் இளவரசர் ஆண்ட்ரு நேற்று டுவிட்டரில் கணக்கை தொடங்கிய சில மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவரை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.