Home நாடு மெட்ராஸ் கஃபே பட விவகாரம்: மலேசியாவிலும் எதிர்ப்பு! கிள்ளான் அரசு சாரா இயக்கத்தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

மெட்ராஸ் கஃபே பட விவகாரம்: மலேசியாவிலும் எதிர்ப்பு! கிள்ளான் அரசு சாரா இயக்கத்தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

589
0
SHARE
Ad

madras-cafeகிள்ளான், ஆகஸ்ட் 20 – விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையையும், இலங்கைத் தமிழர்களையும் இழிவு படுத்தும் வகையில் கதையம்சம் கொண்ட மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மலேசியாவில் திரையிடப்படாமல், கட்டாயம் தடை விதிக்க வேண்டும் என்று 20 அரசு சாரா இயக்கத்தின் சார்பாக எழிலன் என்பவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபாகரனையும் விடுதலைப் புலிகளின் இனப்போராட்ட வரலாற்றையும் புரிந்து கொள்ளாமல், இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தை தயாரிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே நிதியுதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

“தமிழீழ மக்களின் போராட்டங்களைப் புரிந்து கொள்ளாமல், அத்தகைய வீரத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் மெட்ராஸ் கஃபே  இந்தித் திரைப்படத்தின் இயக்குனர் ஷுஜித் சகார் அவர்களுக்கும் இந்த  வேளையில் எங்கள் எதிர்ப்பலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இந்தத் திரைப்படம் அமைதிப்பூங்காவாக இருக்கும் நமது மலேசிய நாட்டில் திரையிடக் கூடாது என்று உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்” என்று தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் எழிலன் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இப்படம் குறித்து தமிழ் நெறி வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி கூறுகையில், “தங்கள் உடமைகளையும், உரிமைகளையும் இழந்து உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத்தமிழினத்துக்கு களங்கம் கற்பிக்கவே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்படுகின்றோம். ஆதலால் இப்படம் கட்டாயம் மலேசியாவில் தடை செய்யப்பட வேண்டும். தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களையும் கூடிய விரைவில் சந்திக்க இருக்கின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவ பயங்கரவாதிகளை நல்லவர்கள் போல் காட்டியுள்ளதாக பல ஊடங்களில் செய்தி கசிகின்றது. எனவே இப்படத்தை இங்கு திரையிடவேண்டாம் என்று எங்களது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் என்று அங்கு கூடியிருந்த இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் முழக்கமிட்டனர்.