Home உலகம் உக்ரைனுக்கு இனி எரிவாயு விநியோகம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்!

உக்ரைனுக்கு இனி எரிவாயு விநியோகம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்!

374
0
SHARE
Ad

ukraine2மாஸ்கோ, ஜூன் 17 – உக்ரைனுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா திடீரென நிறுத்தியிருப்பது, இருநாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் நாட்டு எரிவாயு நிறுவனமான நாப்டோகாஸின் தலைவர் ஆண்ட்ரி கோப்லேவ் கூறுகையில், “எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவிட்டது. ரஷ்யாவின் எரிவாயு இல்லாமல், டிசம்பர் மாதம் வரை  மட்டுமே உக்ரைனால் சமாளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோமின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி குப்ரியானோவ் கூறுகையில், “ஏற்கெனவே வழங்கப்பட்ட எரிவாயுவுக்கான பணத்தை உக்ரைன் செலுத்தவில்லை. ஆதனால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. இனி எரிவாயு வழங்க வேண்டுமானால், அதற்கான பணத்தை உக்ரைன் முன்கூட்டியே செலுத்த வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரஷ்யாவினால் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட எரிவாயுவுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை உக்ரைன் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் பாதித் தொகையை திங்கள்கிழமைக்குள் வழங்க வேண்டும் என்று உக்ரைனுக்கு ரஷ்யா கெடு விதித்திருந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, உக்ரைனுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தி விட்டது.

ரஷ்யாவிலிருந்து உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. உக்ரைனுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.