இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது அவரது குடும்பத்தினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கை காவல்துறை அதிகாரியின் மனைவி பெரேரா போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“அரசு கருவூலம் ஒன்றில் இருந்த 100 கிலோ தங்கத்தை விற்பதற்கு ராஜபக்சேவின் மனைவி முயற்சி செய்தார். எனது கணவர் கொழும்பின் வடக்கு பகுதி காவல் துறை பொறுப்பில் இருந்த போது ராணுவ உளவு பிரிவில் இருந்து இந்த தகவல் கிடைத்தது”.
“இது குறித்து அவர் விசாரிக்க தொடங்கினார். இதை அறிந்ததும் ராஜபக்சே அரசு எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தது. என்னுடைய மகனும் கைது செய்யப்பட்டான்”.
“இந்த முறைகேடு பற்றியே வெளியே தகவல் சொன்னால் உங்கள் கணவர் சிறையை விட்டு வெளியே வர முடியாது என்றும் அவர்கள் மிரட்டினார்கள்” என போலீசாரிடம் இலங்கை காவல்துறை அதிகாரியின் மனைவி பெரேரா புகார் செய்துள்ளார்.
ராஜபக்சேவின் மனைவி மீது புகார் கூறப்பட்டுள்ளதால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை கடல் கொள்ளையர்களுக்கு ராஜபக்சேவின் தம்பி விற்பனை செய்ததாகவும் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.