எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து கார உணவுகளையே சாப்பிட்டு வரும் ஒருவருக்கு நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும்.
இந்த பாதிப்பு உணவுப்பாதையின் தொடக்கமான தொண்டையில் ஆரம்பித்து மலத்துவாரம் வரை எல்லா இடங்களிலும் பாரபட்சமில்லாமல் தொந்தரவுகளை உருவாக்கும்.
அதிலும், வயிற்றுப்பகுதிதான் கார உணவுகளால் அதிகம் பாதிப்படைகிறது. ஆரம்பத்தில் நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கி, பிறகு சின்னச் சின்னதாக புண்களை(Gastritis) வயிற்றில் ஏற்படுத்தும்.
சிலருக்கு காரமாக சாப்பிட்டால்தான் சாப்பிட்டது போலவே இருக்கும். அவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம். அதற்காக மிளகையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி விடக் கூடாது.
தவிர்க்க இயலாமல் கார உணவுகளை சாப்பிட்ட நாளில் தயிர், மோர், சர்க்கரை கலந்த தயிர் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்வது அதன் பாதிப்புகளைக் குறைக்கும். பொதுவாகவே சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 மணிநேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.
காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் கார உணவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. கார உணவுகளினால் வயிற்றில் புண்ணோ, அல்சரோ ஏற்பட்டால் அதற்கென பிரத்யேகமாக மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும்.
இது தவிர, காரமான உணவு மனிதர்களுக்கு அதிக கோபம் உட்பட பல உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதனால் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.