Home இந்தியா மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வி விடுதலை – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வி விடுதலை – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

560
0
SHARE
Ad

nஇஸ்லாமாபாத், மார்ச் 14 – மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியை விடுதலை செய்ய பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 11 தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

இதில் வெளிநாட்டினர் உட்பட 154 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், விசாரணையின் போது இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லக்வி மூளையாக செயல்பட்டதாக தெரிவித்தான்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து இந்தியா, லக்வியை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அதனை சட்டை செய்யாத பாகிஸ்தான், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பயந்து லக்வியை சகல வசதிகளுடன் சிறையில் அடைத்து இருந்தது.

இந்நிலையில், லக்வியை விடுதலை செய்வதற்கான உத்தரவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி  நுரூல் ஹக் கூறியுள்ள தீர்ப்பில்,

“மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக லக்வி செயல்பட்டதற்கான சரியான சாட்சியம் இல்லை. அதனால் அவரை தடுப்பு காவல் தடை சட்டத்தில் இருந்து விடுதலை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியா கண்டனம்:

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட லக்வி விடுதலை செய்யப்பட்டதற்கு, பாகிஸ்தானை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது, லக்வியை சுதந்திரமாக நடமாடாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “லக்விக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தான் உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற எந்த பாடுபாடும் இல்லை.

சட்ட ரீதியான நடவடிக்கையை ஒழுங்குபடுத்த தவறிய நிலையில், லக்வி விடுதலையாகி வெளிவராமல் இருக்க வேண்டும். இது முற்றிலும் பாகிஸ்தான் அரசின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் இந்திய தூதர் அப்துல் பாசிதை நேரில் அழைத்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.