Home இந்தியா 2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் இன்னும் 9 நாட்கள் மட்டுமே செல்லும் – ரிசர்வ் வங்கி...

2005-க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் இன்னும் 9 நாட்கள் மட்டுமே செல்லும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

545
0
SHARE
Ad

indian_rupees-498x295புதுடில்லி, ஜூன் 22-  2005-ஆம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதற்குள்  வங்கிகளில் கொடுத்து அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும், அல்லது வங்கிக் கணக்குகளில்  செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், “2005க்கு முன் அச்சிடப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் உட்பட அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே, அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர், வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் வரை இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. பின்பு, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு ரூபாய் நோட்டின் பின்புறத்தின் கீழ் பகுதியில், அந்த நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு சிறிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அப்படிக் குறிக்கப்படவில்லை என்றால், அது 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு ஆகும். அந்த நோட்டுகள் இனி செல்லுபடியாகாது.

இது சரி வருமா? பொது மக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனரா? என்னும் கேள்விக்கு, ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தோர் கூறியதாவது: குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுவது, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை தான். இதற்கு முன், நம் நாட்டில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றனர்.

கடந்த 13 மாத காலத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் உட்பட, 164 கோடி எண்ணிக்கை கொண்ட, 21 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டு, அவை அழிக்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியால் அழிக்கப்பட்ட நோட்டுகளில், 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 87 கோடி.

500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 56 கோடி.

1,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 21 கோடி.