Home இந்தியா சென்னையில் ஆங்காங்கே மூலிகைப் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி ஏற்பாடு  

சென்னையில் ஆங்காங்கே மூலிகைப் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி ஏற்பாடு  

546
0
SHARE
Ad

muuசென்னை, ஜூன்26- சென்னை மாநகரை எழில்மிகு மாநகராக மாற்றுவதற்குப் பசுமையான பூங்காக்கள், சாலையோரப் பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மூலிகைச் செடிகள், மூலிகை மரங்கள் மட்டுமே இடம்பெறும் பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ஓட்டேரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூலிகைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

அதைத்தொடர்ந்து, சென்னையில் மாதவரம்,முகப்பேர், பெருங்குடி, கோடம்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் மூலிகைப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்தப் பூங்காக்களில் பூவரசு, நீர்நொச்சி, வெப்பாலை, தூதுவளை, வலம்புரி, மருதாணி, செம்பருத்தி, மடிலாம்பூ, புங்கச்செடி என ஏராளமான மூலிகைச் செடிகள் மற்றும் மூலிகை மரங்கள் அமைக்கப்பட உள்ளன.

mediஅதுமட்டுமில்லாமல், பூங்காக்களில் உள்ளது போலவே, பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாகப் பாதைகளும்,ஓய்வெடுக்க இருக்கைகளும் இந்த மூலிகைப் பூங்காக்களில் அமைக்கப்பட உள்ளன.

தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

ஏற்கனவே மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, சிங்கப்பூர், மலேசியா போன்ற வளர்ந்த நாடுகளைப் போலத் தூய நகரமாகச் சென்னையை மாற்றும் நோக்கில் ‘சிங்காரச் சென்னை’ திட்டம் கொண்டுவரப்பட்டு, சென்னை முழுக்க ஆங்காங்கே பூங்காக்களும் செடி கொடிகளும் நட்டு வைக்கப்பட்டன.

ஆனால், எதுவும் பராமரிக்கப்படவில்லை. சாலையோரப் பூங்காக்கள் தூர்ந்து போயும்,  சாலை மையத்தடுப்புகளில் நடப்பட்ட செடிகள் காய்ந்து போயும் வீணாய்ப் போயின.

அதுபோல் இந்தத் திட்டமும் தூர்ந்து போய்விடக் கூடாது. தொடங்குவது போல் தொடர்ந்து பராமரிப்பதும் அவசியம். அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.