Home Featured நாடு மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள் –...

மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள் – கண்டனங்கள்!

848
0
SHARE
Ad

Murugesanகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் பங்கேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து பலத்த கண்டனங்களும் சர்ச்சைகளும் மஇகாவிலும், முன்னாள் மஇகா தேசியத் தலைவர் பழனிவேல் தரப்பிலும் எழுந்துள்ளன.

பழனிவேல் தரப்பில் தீவிரமாகச் செயலாற்றி வந்த முருகேசன், நஜிப் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டதுதான் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முருகேசன், சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய அரசாங்க அமைப்புகளுள்  சங்கப் பதிவகமும் ஒன்று என வலியுறுத்தி இருந்தார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் அதிகாரங்களை முழுமையாகப் பறிக்கும் அதிகாரம் தற்போது சங்கப் பதிவகத்தின் கைகளில் உள்ளது என முருகேசன் அந்தக்கூட்டத்தில் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

நேரடியாக மஇகா பெயரையோ, பழனிவேல் பெயரையோ முருகேசன் அந்தக் கூட்டத்தில் குறிப்பிடாவிட்டாலும், அண்மையில் சங்கப் பதிவகம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் பழனிவேல் மஇகா உறுப்பினர் தகுதியையும், அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் பதவியையும் இழந்தது குறித்துத்தான் முருகேசன் பேசியிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெளிவாகப் புரிகின்ற ஒன்றுதான்.

நீதிமன்ற வழக்கைப் பற்றி ஏன் முருகேசன் குறிப்பிடவில்லை?

ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும், அரசாங்க அமைப்புகள் சீர்திருத்தப்பட MIC logoவேண்டும் என இரண்டு தெளிவான நோக்கங்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் மஇகா-சங்கப் பதிவகம் குறித்த சர்ச்சைகளை முருகேசன் எழுப்பியது எந்த வகையில் பொருத்தம் என மஇகா வட்டாரம் ஒன்று கேள்வி எழுப்பியது.

“சங்கப் பதிவகத்தின் அதிகாரங்கள் மற்றும் கட்சி முடிவுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்ற சட்டம் ஆகிய அம்சங்களில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் இரண்டுவித கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், பழனிவேல் விவகாரத்தில் சங்கப் பதிவக முடிவுகள் குறித்து நீதிமன்றம் சென்ற பழனிவேல் தரப்பினர் கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை போராடித்தான் தோற்றார்களே தவிர – சங்கப் பதிவகத்தின் ஒரு தலைப்பட்சமான முடிவினால், பழனிவேல் தனது பதவியை இழக்கவில்லை. ஒரு வழக்கறிஞரான முருகேசனுக்கு இந்த அம்சங்கள் நன்கு தெரிந்திருந்தும் ஏன் இந்தப் பிரச்சனையின் ஒரு பாதியை மட்டும் கூட்டத்தில் எழுப்பினார்?” என்று அந்த மஇகா வட்டாரம் கேள்வி எழுப்பியது.

சங்கப் பதிவகம் செய்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தோல்வி கண்டு, பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று வழக்காடித் தோற்ற பின்னர்தான் சட்டங்களின் அடிப்படையில் பழனிவேலுவும் அவரது தரப்பினர் சிலரும் தங்களின் பதவிகளை இழந்தார்கள் எனவும் அந்த மஇகா வட்டாரம் மேலும் சுட்டிக் காட்டியது.

தேவமணி பதிலடி

sk-devamany-jan17-300x202மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் முருகேசன் பங்கேற்பைத் தொடர்ந்து, பதிலடியாக அறிக்கை ஒன்றை விடுத்த, மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, முருகேசன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது, பழனிவேல் தரப்பினர் எதிர்க்கட்சியினரோடு இணைந்து ரகசியமாக நஜிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது எனக் கூறியிருந்தார்.

முருகேசன் பழனிவேல் அணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முருகேசனிடமிருந்து விலகி நிற்கும் பழனிவேல் தரப்பினர்

இதற்கிடையில், பழனிவேல் தரப்பில் தகவல் பிரிவுத் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கும் எல்.சிவசுப்ரமணியம் விடுத்த அறிக்கையில் முருகேசன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இந்திய சமுதாயத்தைப் பற்றிப் பேச முருகேசன் யார் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து நாங்கள் (பழனிவேல் தரப்பினர்) நஜிப்புக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும் சிவசுப்ரமணியம் கூறியிருக்கின்றார்.

G-Palanivel1தொடர்ந்து இன்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்த அறிக்கைகளின்படி, முருகேசன் அண்மையக் காலமாக பழனிவேல் தரப்பினரின் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

பழனிவேலுவுக்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கும் வாட்ஸ் எப் குழுக்களின் பரிமாற்றங்களின் மூலமும், முருகேசனுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நஜிப்புக்கு எதிரான ஒரு கூட்டத்தில், அதுவும் நஜிப்பை பதவி விலக வலியுறுத்தும் மகாதீர் தலைமையிலான ஒரு கூட்டத்தில் முருகேசன் கலந்து கொண்டிருப்பதால், அவசரம் அவசரமாக அவரிடமிருந்து விலகி நிற்பதுபோல் காட்டிக் கொள்ளவும்,

அவரது நடவடிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை எனக் காட்டிக் கொள்ளவும் பழனிவேல் தரப்பினர் தீவிரமாக முனைந்துள்ளனர் எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஇகா சார்பில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் 2008ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியிலும் முருகேசன் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மஇகா சார்பாக வெஸ்ட்போர்ட்ஸ் மலேசியா நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் பதவி வகித்திருக்கின்றார்.

-இரா.முத்தரசன்

(அடுத்து: மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்தும் தனக்கு எதிரான விமர்சனங்கள் குறித்தும் முருகேசன் வழங்கும் பதில்!