Home Featured நாடு மலேசிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ‘அகரம்’ பற்றி பேச சூர்யா 250,000 ரிங்கிட் கேட்டாரா?

மலேசிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ‘அகரம்’ பற்றி பேச சூர்யா 250,000 ரிங்கிட் கேட்டாரா?

1147
0
SHARE
Ad

suryaகோலாலம்பூர் – தான் நடத்தி வரும் ‘அகரம்’ அறக்கட்டளையின் வெற்றி குறித்தும், கல்வி முறை குறித்தும் மாணவர்களின் கல்வி நலனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்கு, நடிகர் சூர்யா  2 லட்சத்து 50,000 ரிங்கிட்  வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணத்தை ‘அகரம்’ அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து இந்துமதமாற்ற நடவடிக்கைக் குழுவின் தலைமைச் செயலாளர் அருண் துரைசாமி தனது முகநூல் (பேஸ்புக்கில்) பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மலேசிய இந்தியர்கள் மூலம் இந்தியாவிலுள்ள நடிகர்களும், பிரபலங்களும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அதற்கு பிரதிபலனாக மலேசிய இந்தியர்களின் நற்பணி பற்றியோ அல்லது சமுதாய உதவி பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அகரம் வெற்றி குறித்துப் பகிரவும், கல்விப் பிரச்சாரம் செய்யவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நடிகர் சூர்யா, அதற்காக 250,000 மலேசியா ரிங்கிட் சன்மானம் கேட்டதாகவும்” அருண் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியா குறித்தும், மலேசிய இந்திய இளைஞர்கள் குறித்தும் கொஞ்சமும் கவலைப்படாத இது போன்ற சுயநலம் கொண்ட பிரபலங்களை நாம் ஏன் ஒதுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அருண் துரைசாமியின் விளக்கம்

Arun Dorasamy-Hindu Convesion Action teamஅருண் துரைசாமி

அருண் துரைசாமியின் முகநூல் பதிவு குறித்து அவரை ‘செல்லியல்’ தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-

“தமிழ் சினிமாவுக்கு மலேசியா இரசிகர்கள் ஆண்டுதோறும் அபரிதமான ஆதரவை வழங்குகின்றனர். ஓர் ஆண்டுக்கு தமிழ் சினிமா மலேசியா இரசிகர்கள் மூலம் வணிக ரீதியாக ஈட்டும் தொகை 180 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கும் கூடுதலாகும். ஆனால், இவ்வளவு பணத்தை நம்மை வைத்துச் சம்பாதிக்கும் இவர்கள் பிரதிபலனாக நமது மலேசிய இந்திய சமுதாயத்திற்காக ஏதாவது திரும்பச் செய்கிறார்களா என்றால் எதுவும் இல்லை. மாறாக, அடிக்கடி வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கலைநிகழ்ச்சிகள் நடத்தி நம்மிடமிருந்து ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் வசூலிக்கிறார்கள்”

“நாங்கள் இந்து சமய மாணவர்களின் நலனுக்காக நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை அமைப்பின் வெற்றி குறித்து பகிர்ந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தோம். நாங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சி வணிக நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதையும், மாணவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்படுவது என்பதையும் தெளிவாகவே அவரது தரப்புக்குத் தெரிவித்திருந்தோம். சூர்யா மற்றும் அவருடன் வருபவர்களின் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் அகரம் அறக்கட்டளைக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நன்கொடை தருவதற்கும் நாங்கள் உறுதியளித்தோம்.”

“ஆனால், அந்தத் தொகைக்காக சூர்யா வருவார் என்று கனவிலும் நினைக்காதீர்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 250,000 ரிங்கிட்டுக்கும் அதிகம்) அகரம் அறக்கட்டளைக்குத் தந்தால்தான் அவர் வருவார் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கேட்பது அவருக்காக அல்ல – நல்ல பணிகள் செய்யும் அவரது அறக்கட்டளைக்குத்தான் என்பதை நாங்களும் அறியாதவர்கள் அல்ல. ஆனால், இங்கு நாங்கள் செய்வதும் இந்திய மாணவர்களின் குறிப்பாக தமிழ் மாணவர்களின் கல்வி நலனுக்காகத்தானே என்பதை ஏன் அவர் உணர மறுக்கின்றார் என்பதுதான் எங்களுக்கு விளங்கவில்லை”

24“அதுமட்டுமல்ல! அவர் நடித்த பல படங்கள் மலேசியாவில் வசூல் ஈட்டி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவருக்கு நிறைய பணத்தை ஈட்டித் தந்துள்ளன. அண்மையில் வெளிவந்து மலேசியாவில் வசூலில் பெரும் வெற்றி பெற்ற ’24’ படமும்கூட, அவரது சொந்தத் தயாரிப்புதான். அதனால்தான் மலேசிய இந்தியர்களை வைத்து இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் நீங்கள், எங்களின் ஏழை மாணவர்களுக்காக, பின்தங்கிய மாணவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள் என எதிர்பார்க்கின்றோம். அதில் தப்பில்லையே?” என அருண் துரைசாமி கேள்வி எழுப்பினார்.

மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி

அருண் துரைசாமி மேலும் தொடர்ந்தார் “இதனைத் தொடர்ந்து நாங்களும் ஒரு முடிவு செய்தோம். இந்த சினிமா பிரபலங்களின் பின்னால் போய் தொங்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உள்நாட்டுக் கலைஞர்களை நாடுவோம் என்று முடிவெடுத்தோம். உள்நாட்டுக் கலைஞர்கள் சிலரை அணுகியபோது இந்திய சமுதாயத்திற்காக தங்களால் ஆன பங்கை வழங்க முன்வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். நாங்கள் உள்நாட்டுக் கலைஞர்களோடு எதிர்வரும் சனிக்கிழமை சந்திப்பொன்றை நடத்தவிருக்கின்றோம். சில நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்”.

Maha Hindu Youth Unity festival-logoஅருண் துரைசாமி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து பணியாற்றும் இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடத்தும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’, இந்து மாணவர்களின் கல்வி நலனுக்காக எதிர்வரும் ஜூன் 3, 4ஆம் தேதிகளில் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள டத்தாரான் பெட்டாலிங் ஜெயாவில் (எம்கோர்ப் மால் எதிரில்) நடைபெறுகின்றது.

ஏழு இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை இந்து இளைஞர் இயக்கம் முன்னின்று நடத்துகின்றது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அருண் துரைசாமி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய இணையத் தளம்:

http://unitehinduyouth.org.my

Maha Hindu Youth unity fetival-website

-செல்லியல் தொகுப்பு