திருக்குறள் நூலை வழங்குகிறார் நடராஜா – (இடமிருந்து தேவஸ்தான அறக்காப்பாளர் டத்தோ சிவகுமார், தேவஸ்தான வாரிய உறுப்பினரும், பத்துமலை மேலாளர் வாரியத் தலைவருமான டத்தோ ஏ.டி.குமாரராஜா, பத்துமலை தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி, தேவஸ்தானச் செயலாளர் சேதுபதி, மற்றும் திருவள்ளுவர் வேடமிட்ட மாணவன்…
பத்துமலை – தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் சார்பில் அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா இலவசமாக வழங்கினார்.
இன்று செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 7-ஆம் தேதி பத்துமலை தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ நடராஜா இந்த நூல்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நடராஜா “திருக்குறள் நூலின் சிறப்புகள் பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. உலகின் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் சிறந்த தத்துவங்கள் அடங்கிய இந்த நூலின் கையடக்கப் பதிப்பை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என பத்துமலைத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியை என்னிடம் கேட்டுக் கொண்டபோது அதற்கு மறுப்பு கூற என்னால் இயலவில்லை. அதனால் இந்த நூல்களை இன்று வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ நடராஜா தம்பதியருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பத்துமலை தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி
#TamilSchoolmychoice
இந்த நிகழ்ச்சியின் இடையே மாணவர்கள் படைத்த கலைநிகழ்ச்சிகளும் குறுநாடகமும் இடம் பெற்றது.
டான்ஸ்ரீ நடராஜாவின் துணைவியார் புவான்ஸ்ரீ நடராஜா, தேவஸ்தானச் செயலாளர் சேதுபதி, தேவஸ்தானப் பொறுப்பாளர்கள், பத்துமலை மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ ஏ.டி.குமாரராஜா, தேவஸ்தான அறக்காப்பாளர்களில் ஒருவரான டத்தோ சிவகுமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.