
(மஇகாவின் தேசியத் துணைத் தலைவர்- செனட்டர் – சட்டத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரே இந்தியர் – தமிழ்நேசன் நாளிதழின் முன்னாள் ஆசிரியர்- வழக்கறிஞர் – என பன்முகத் தன்மையும் ஆற்றலும் வாய்ந்தவர் டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன். ஆதி.நாகப்பன் அவர்களின் கீழ் வழக்கறிஞராகப் பணிபுரிந்த சுவையான அனுபவங்களை, அன்னாரின் சிறந்த குணநலன்களை, இரா.முத்தரசனுடன் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் விவரிக்கிறார் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன். மஇகாவின் தேசிய உதவித் தலைவர், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் என பல பொறுப்புகளைக் கடந்த காலங்களில் வகித்தவர் விஜேந்திரன்)
- பிரிட்டிஷார் போன்று ஆங்கிலத்தில் உரையாடும் வல்லமை!
- தமிழ், ஆங்கிலம், மலாய் என மும்மொழி புலமை கொண்டவர்!
- கடின உழைப்பாளி; மக்களிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்!
- ‘பகவத் கீதை’ மட்டுமே நான் அறிந்த இந்து நூல் என்றவர்!
ஆதி.நாகப்பனுடன் வழக்கறிஞராகப் பணிபுரிந்த காலகட்டம்

நான் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்து விட்டு நாடு திரும்பிய சமயம். 1969-ஆம் ஆண்டு காலகட்டம். அடுத்ததாக சேம்பரிங் என்ற தொழில் முறை வழக்கறிஞருக்கான பயிற்சியை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும். ஆதி.நாகப்பனுக்கு நெருக்கமான எங்களின் குடும்ப நண்பர் ஒருவர் என்னை அவரிடம் பரிந்துரைக்க – ஆதி.நாகப்பனும் ஏற்றுக் கொள்ள – நான் எனது வழக்கறிஞர் பயிற்சியை அவரின் வழக்கறிஞர் அலுவலகத்தில் தொடங்கினேன்.
எனது திறமைகளைப் பார்த்து எனது பயிற்சி முடிந்ததும், தனது நிறுவனத்திலேயே நான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஆதி.நாகப்பன். அதன்படியே நான் மேலும் 3 ஆண்டுகள் அவரின் ‘ஆதி நாகப்பன் அண்ட் கம்பெனி’ வழக்கறிஞர் நிறுவனத்திலேயே அவரின் கீழ் வழக்கறிஞராகப் பணிபுரிந்தேன்.

அவருடன் பணிபுரிந்த அந்த 4 ஆண்டுகள் என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத ஒரு பகுதியாகும். அவரிடம் சட்டத் தொழில் ரீதியாக நான் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்கு நிறைந்த அளவில் ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினார்.
நான் பணிபுரிந்த காலத்தில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ எம்.மகாலிங்கம், கோலாலம்பூர் மாநகரசபையின் முன்னாள் சட்டப்பிரிவு இயக்குநர் ஞானராஜா, முன்னாள் நீதிபதி ஜேம்ஸ் ஃபூங் ஆகியோரும் என்னுடன் ஆதி.நாகப்பன் அலுவலகத்தில் பணியாற்றினர்.
மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
அவரிடம் நான் கண்டு வியந்தது, அவரின் மும்மொழிப் புலமைதான். தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றும் அளவுக்கு அவர் தமிழில் புலமை கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதே சமயத்தில் அவர் பிரிட்டிஷாரைப் போன்ற உச்சரிப்போடு ஆங்கிலத்தில் உரையாடும் வல்லமையையும் கொண்டிருந்தார். அந்தக் கால இந்திய அரசியல்வாதிகளில் எனக்குத் தெரிந்து மலாய் மொழியை முறையாகக் கற்றுக் கொண்டு சிறப்பாக உரையாடியவர் அவர்தான். நாடாளுமன்ற மேலவையில் செனட்டராக இருந்தபோது அவர் மலாய் மொழியில் உரைகளை நிகழ்த்தும் திறனைப் பார்த்து மற்ற மலாய் அரசியல்வாதிகளும் வியந்து பாராட்டினர்.
மேலும் படிக்க:
அவர் பொதுமக்களிடத்தில் அன்புடனும் பணிவுடனும் பழகும் இனிய பண்பைக் கொண்டிருந்தார். பொதுமக்களிடத்திலும், அவரிடம் வழக்குக்காக வரும் வாடிக்கையாளர்களிடத்திலும் அவர் கண்ணியத்துடன், பண்புடன் நடந்து கொள்ளும் – பழகும் விதத்தைப் பார்த்து – நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எதற்கும் ஆத்திரமோ, பதட்டமோ கொள்ள மாட்டார்!
அதற்கு நேர்மாறாக, அடிக்கடி நான் கோபம் கொள்ளுவதைப் பார்த்து நிறைய தடவை எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார். “நாம் ஒவ்வொரு முறை கோபப்படும்போதும் நம் வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை இழக்கிறோம்” என்பது அவர் அடிக்கடி கூறும் வாசகம். அப்படி இருந்தும் அவர் இளம் வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்ததுதான் சோகம்.
அவர் கடின உழைப்பாளியும் கூட! சில நாட்களில் அவர் காலை தொடங்கி மாலை வரை இடைவிடாமல் பணியாற்றுவதை நான் பல முறை கண்டிருக்கிறேன்.
முஸ்லீம் அல்லாதவர்களுக்கான
திருமண – விவகாரத்து சட்டத்தை உருவாக்கியவர்
ஒரு வழக்கறிஞராக, சட்ட அமைச்சராக அவர் இரண்டு முக்கிய ஆவணங்களை நம் நாட்டுக்காக உருவாக்கித் தந்தார். முதலாவது, ஊராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையும், அதற்கான நடைமுறைகளும்!
அதற்கான ஆய்வுக் குழுவுக்கு அவர் தலைவராகப் பொறுப்பேற்று அந்தப் பணியைச் சிறப்பாக முடித்துத் தந்தார். ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்த அரசாங்கம் அப்போதும் – இப்போதும் – ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், இன்றுவரை ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என ஆதரிப்பவர்கள் மேற்கோள் காட்டும் ஆவணம் – ஆதி. நாகப்பன் தலைமையிலான குழுவினர் தயாரித்துத் தந்த அந்தப் பரிந்துரைத் திட்டம்தான்.
பல ஆய்வுகள் செய்து ஆதி. நாகப்பன் தலைமையிலான குழு 1976-இல் உருவாக்கிய சட்டம் – முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திருமண, விவாகரத்து சட்டமாகும். இன்றுவரையில் இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான திருமணம் – விவாகரத்து தொடர்பிலான சட்ட அம்சங்கள் நீதிமன்றங்களால் கையாளப்படுகின்றன. சட்ட அமைச்சராக ஆதி.நாகப்பனே இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த இரு ஆவணங்களின் தயாரிப்பிலும் அவற்றின் நகல் வரைவுளை எழுதுவதிலும் (drafting) நான் ஆதி நாகப்பனுக்கு உதவியாகப் பணியாற்றினேன்.
“பகவத் கீதை மட்டுமே நான் அறிந்த இந்து நூல்” என்றவர்!
அவரிடம் பல முறை பல விவகாரங்கள் குறித்து நான் விவாதித்திருக்கிறேன். ஒருமுறை இந்து சமயம் குறித்து நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, “எனக்கு இந்து மதத்தில் எந்த நூலும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே நூல் பகவத் கீதை மட்டும்தான். அதைத்தான் நான் படிக்கிறேன். அதன்படிதான் நான் நடக்கிறேன்” என அப்போது என்னிடம் கூறியது இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.
அரசியலுக்கு வராதீர்கள் என்று அறிவுறுத்தினார்
அவரிடம் பணியாற்றியதால், அவரின் ஆலோசனையாலோ, உந்துதலாலோதான் நான் அரசியலுக்கு வந்தேன் என சிலர் நினைக்கக் கூடும். ஆனால், அவர் எனக்கு அதற்கு நேர் எதிர்மறையான அறிவுரையை வழங்கினார். “ஒரு சிறந்த வழக்கறிஞராவதற்கான எல்லாத் திறமைகளையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். எனவே, கண்டிப்பாக அரசியலுக்கு வராதீர்கள். தொழிலில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. சிறந்த வழக்கறிஞராக உயர்வீர்கள்” என்பதுதான் அவர் எனக்குக் கூறிய அறிவுரை.
ஆனால், விதி யாரை விட்டது? வேறொரு உருவத்தில் விதி என்னை அரசியல் களத்திற்குள் கொண்டு வந்து விட்டது. அந்த உருவம் துன் ச.சாமிவேலு!
சாமிவேலுவை ஆதி நாகப்பன் அலுவலகத்தில் சந்தித்தேன்

நான் ஆதி நாகப்பனிடம் பணிபுரிந்த காலகட்டத்தில், துன் சம்பந்தன்-டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைமைத்துவப் போராட்டம் தீவிரமாக அரங்கேறிக்கொண்டிருந்தது. ஆதி நாகப்பன் மாணிக்கவாசகத்தை ஆதரித்தார். எனவே, ஆதி நாகப்பனுக்கு ஆதரவாக அவருடன் பணியாற்றிய என்னைப் போன்றவர்களும் மாணிக்கவாசகத்தையே ஆதரித்தோம்.
ஆதி நாகப்பனுடன் அப்போது நான் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். மஇகா அலுவலகத்திற்கும் வந்திருக்கிறேன். அவர் மஇகா தலைமையகத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டால், நாங்கள் அறைக்கு வெளியே காத்திருப்போம். இருப்பினும் அப்போதெல்லாம் எனக்கு ஏனோ அரசியலில் ஆர்வம் எழாமல் இருந்தது.
அந்த சமயங்களில், எங்களின் வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சாமிவேலு ஆதி.நாகப்பனைச் சந்திக்க அடிக்கடி வருவார். ஆதி நாகப்பன் வேறு யாரிடமாவது சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தால், எனது அறைக்கு வந்து சாமிவேலு அமர்ந்து கொள்வார். ஆதி நாகப்பன் அழைப்புக்காகக் காத்திருப்பார்.
அவ்வாறு காத்திருக்கும் சமயங்களில் எனக்கும் சாமிவேலுவுக்கும் இடையிலான உரையாடலில் எங்கள் இருவருக்கும் பிடித்தமான தமிழ் சினிமாப் பாடல்கள் முக்கிய இடம் பெறும். சினிமாப் பாடல்களை சாமிவேலு அழகாகப் பாடிக் காட்டுவார். எனக்கும் சினிமாப் பாடல்கள் மீது மோகம் என்பதால் நானும் அவருடன் ஆர்வத்துடன் சினிமாப் பாடல்கள் குறித்து உரையாடுவேன்.
அப்படி ஏற்பட்டதுதான் சாமிவேலுவுடனான எனது தொடர்பு. பிற்காலத்தில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைவராக இருந்தபோதே, மஇகா கிளை ஒன்றுக்கு விண்ணப்பிக்கும்படி சாமிவேலு கூறினார். அப்போது அவர் ஆதி நாகப்பனின் மரணத்தைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராகியிருந்தார். நானும் என் வீடு இருந்த புக்கிட் டாமன்சாரா என்ற வட்டாரத்திற்கான கிளைக்கு விண்ணப்பித்தேன். பல பிரச்சனைகள், கால தாமதத்திற்குப் பின்னர் டான்ஸ்ரீ மாணிக்கா 1978-இல் எனக்கு புக்கிட் டாமன்சாரா கிளைக்கான அங்கீகாரத்தைத் தந்தார். நானும் கிளைத் தலைவரானேன். மஇகா அரசியல் களத்திற்குள் வந்தேன். பின்னர் கெர்லிங் ஆலய வழக்கால் பிரபலமானேன்.
ஆதி நாகப்பனின் அகால மரணம்.
சுமார் நான்காண்டு காலம் ஆதி நாகப்பன் அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு, எனது சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தை நான் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தேன். ஆதி நாகப்பனுடனான எனது தொடர்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. சட்ட விளக்கங்கள், ஐயப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அவர் என்னை அழைப்பார்.
இத்தகைய சூழலில்தான் துணையமைச்சராகவும் செனட்டராகவும் இருந்த அவர் 1976 ஜனவரியில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். என்னைப் போன்றவர்கள் அந்தப் பதவிக்கு அவர் பொருத்தமானவர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மலேசிய வரலாற்றில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்த ஒரே இந்தியர் அவர்தான்.
அமைச்சரானதற்காக அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. தலைநகர் பெடரல் தங்கும் விடுதியில் (Federal Hotel) 1976ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அந்தப் பாராட்டு விழா நடைபெற்றது. ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகமும் சமூக இயக்கத் தலைவர்களும், மஇகா பிரமுகர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நானும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு கலந்து கொண்டேன்.
பாராட்டுரைகள், மாலை அணிவிப்புகள் எல்லாம் முடிந்து, நன்றி தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய ஆதி. நாகப்பன், திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார். கூட்டத்தினர் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆதி நாகப்பன் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரின் மரணத்துடன் மலேசிய இந்திய சமூகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.