புதுடெல்லி, செப். 3– நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் மாயமானது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மேல்–சபையில் விளக்கம் அளித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறையை கவனித்த போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் மாயமானது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கிளப்பி வருகின்றன.
பாராளுமன்றத்தின் மேல்–சபையிலும் இன்று பாரதீய ஜனதா எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, இந்த விவகாரத்தில் நிலக்கரித்துறை மந்திரி ஜெய்ஸ் வால் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் மேல்–சபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பாக தேடப்படும் சில ஆவணங்கள் கிடைக்க வில்லை. அவற்றை உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
பெரும்பாலான ஆவணங்கள் மீட்கப்பட்டு விட்டன. ஒரு சில ஆவணம் மட்டும் சிக்கவில்லை. நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை.
நிலக்கரித்துறை அமைச்சர் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துள்ளார். நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.