95 வயதான அய்யங்கார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவையடுத்து புனே நகரில் உள்ள அய்யங்கார் யோகா பயிற்சி நிறுவன கிளைகள் அனைத்தும் மூடப்பட்டன.
அய்யங்காரின் யோகா சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியுள்ளது. அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
அவரது ஆசனங்கள் தான் தன்னை கிரிக்கெட் உலகில் இவ்வளவு பெரிய உயரத்திற்கு அழைத்துச்சென்றதற்கு காரணம் என்று சச்சின் கூறியுள்ளார். முதுகு வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்த தன்னை அய்யங்காரிடம் கிரண் மோரே அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ள சச்சின்,
அய்யங்காரின் சாந்தமான முகமும், அவரது மென்மையான அணுகுமுறையும் தன்னை பெரிதும் ஈர்த்ததாக கூறியுள்ளார். அற்புதமான சில யோகாசன ஆசனங்களை தனக்கு அய்யங்கார் வழங்கியதாக சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.