முந்தைய இலங்கை அரசில் அமைச்சர் பதவி வகித்த சிறீசேனாவை, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுவேட்பாளராக நிறுத்தின.
இதனால் அதிருப்தி அடைந்த அப்போதைய அதிபர் ராஜபக்சே, தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள பல சதி வேலைகளை செய்தார் என பல புகார்கள் எழுந்தது.
இருவரும் சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கு பிறகு சுதந்திர கட்சியின் தலைவராக சிறீசேனா தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சேவை அவரை நிறுத்த முயற்சி மேற்கொள்கின்றனர்.
அதிபர் சிறிசேனா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை சிறீசேனாவை சந்தித்த ராஜபக்சே தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு சிறீசேனா சம்மதம் தரவில்லை என்றும், இதனால் தனது சகோதரர்கள் யாரையாவது பிரதமர் வேட்பாளராக நிறுத்த ராஜபக்சே தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.