Home இந்தியா விவசாயிகள் தற்கொலைக்குக் காதலும் ஆண்மைக் குறைவுமே காரணம்: விவசாய அமைச்சர் பதில்!

விவசாயிகள் தற்கொலைக்குக் காதலும் ஆண்மைக் குறைவுமே காரணம்: விவசாய அமைச்சர் பதில்!

406
0
SHARE
Ad

Tamil_News_large_1303333புதுடில்லி, ஜூலை 25- ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காதல் பிரச்சினை, வரதட்சணைப் பிரச்சினை, ஆண்மைக் குறைவு போன்ற தனிப்பட்ட பிரச்சினை தான் காரணம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன், பாராளுமன்றத்தில்  எழுத்தின் மூலம் தெரிவித்திருக்கும் பதிலால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்னவென்று மாநிலங்களவையில்  எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியதையடுத்து, அவர் எழுத்துப்பூர்வமாக  அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் அவர்  அளித்துள்ள பதிலாவது: “தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளித்துள்ள தகவலின்படி, விவசாயிகள் குடும்பப் பிரச்சினை, உடல்நிலைக் கோளாறு, போதைப் பொருள் பழக்கம், வேலையின்மை, சொத்துத் தகராறு, தொழில் பிரச்னை, காதல் கோளாறு, ஆண்மைக் குறைவு, திருமணம் ரத்தாவது, வரதட்சணைப் பிரச்சினை போன்ற இன்ன பிற சொந்தக் காரணங்களினால் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனத் தெரிகிறது.”எனப் பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும்,”விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னையாக இருப்பது, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான ஆதார விலைதான். அது கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? எனவும்  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடன் பிரச்சினையால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அந்தப் பதிலில் அவர் கூறவில்லை.

இப்படிப்பட்ட பதிலுக்கு  எதிர்க்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமைச்சரின் கருத்து பொறுப்பில்லாதது என்றும், அமைச்சரின் பதில் விவசாயிகளை இழிவுபடுத்துகிறது என்றும், இது விவசாயிகளைப் பிரச்னையிலிருந்து திசைதிருப்பும் செயல் என்றும், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தமது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை முடக்கி வரும் வேளையில், மத்திய அமைச்சரின் இத்தகைய பதில் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.