Home கலை உலகம் விஷால் அணிக்கு வந்தால் மட்டுமே உயிரோடு இருக்கலாம்: நாடக நடிகர் சங்க நிர்வாகிக்குக் கொலை மிரட்டல்!

விஷால் அணிக்கு வந்தால் மட்டுமே உயிரோடு இருக்கலாம்: நாடக நடிகர் சங்க நிர்வாகிக்குக் கொலை மிரட்டல்!

675
0
SHARE
Ad

actor-vishal-marriageதிருச்சி, ஜூலை 25- சரத்குமார் அணியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான முகமது மஸ்தானுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், ‘‘விஷால் அணிக்கு வந்து விடு; இல்லையேல் உயிரோடு இருக்க முடியாது’’ என்று கொலை மிரட்டல் விட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகமது மஸ்தான், முன்பு தஞ்சாவூரிலுள்ள தனது தம்பி வீட்டில் வசித்து வந்தார். இந்த வீட்டு முகவரிக்கு முகமது மஸ்தான் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது.

அக்கடிதத்தில்,‘‘திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நாடகக் கலைஞர்களையும் அழைத்துக்கொண்டு அண்ணன் நடிகர் விஷால் அணிக்கு நீ வந்துவிடவேண்டும். அப்படி இல்லையென்றால், நீயும் உன் குடும்பத்தாரும் உயிரோடு இருக்க முடியாது. ஜாக்கிரதை!

#TamilSchoolmychoice

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ராஜாவையும் அங்குள்ள நாடக நடிகர்களையும் அண்ணன் விஷால் அணிக்கு அழைத்துக் கொண்டு வா. தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற உழைக்க வேண்டும். இல்லையேல் ஒரே குண்டில் கொல்லப்படுவீர்கள். எச்சரிக்கை!- இப்படிக்கு வையாபுரி, கெங்கு ரெட்டி, சென்னை-26” என எழுதப்பட்டிருந்தது.

அக்கடிதத்தை அவரது தம்பி கொண்டு வந்து திருச்சியிலுள்ள முகமது மஸ்தானிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த முகமது மஸ்தான் அதிர்ச்சியடைந்தார்.

உடனே, திருச்சி மாநகரக் காவல்துறை  ஆணையர் சரோஜ்குமார் தாகூரிடம் கடிதத்தைக் காண்பித்துப் புகார் தெரிவித்தார்.

அவர் கடிதத்தின் நகலைப் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.