Home நாடு 1எம்டிபி குறித்து மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – மொகிதின்

1எம்டிபி குறித்து மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – மொகிதின்

439
0
SHARE
Ad

MUHYIDDIN_PPAUH (1)கோலாலம்பூர், ஜூலை 28 – 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், தாமே முன்வந்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதன் பின்னணியில் எந்தவித காழ்ப்புணர்வும் தமக்கில்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

“மக்களை குறைவாக எடைபோட்டுவிடக் கூடாது. நாம் பொய் சொல்ல இயலாது. 1எம்டிபி குறித்து இரண்டாவது நிதியமைச்சர் விளக்கமளித்தால், அவரை நோக்கி விமர்சனங்கள் பாய்கின்றன. அதேபோல் வீட்டுவசதித்துறை அமைச்சர் பேசினால் அவரும் பதிலடி வாங்குகிறார்.

#TamilSchoolmychoice

“நாம்மால் சரியான விளக்கங்களை அளிக்க முடியவில்லை. ஏனெனில் அது தொடர்பான உண்மைகள் எதுவும் நமக்கும் தெரியாது. எனவே உண்மைகளைச் சொல்லப் போவது யார்? அது பிரதமராகத்தானே இருக்க வேண்டும்?” என்று செராசில் அம்னோ கூட்டத்தில் பேசிய மொகிதின் யாசின் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அப்போதைய பிரதமர் துன் அப்புல்லா படாவி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய பேராளர் குழுவிற்கு தாம் தலைமையேற்றதாக ஒப்புக் கொண்ட அவர், தற்போதுள்ள சூழ்நிலை முற்றிலும் வேறு என்றார்.

“அம்னோ தற்போது வலுவிழந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தலைமைத்துவ போராட்டம் ஏற்படுவது கட்சிக்கு நல்லதல்ல,” என்று மொகிதின் கூறினார்.

1எம்டிபி குறித்து ரகசியமாக விவாதித்ததாக தம்மீது முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து கருத்துரைத்த அவர், “அந்தக் கூட்டத்தில் பேசியவற்றையே பிரதமரிடம் கூறினேன்,” என்றார்.

“1எம்டிபி குறித்து விசாரணை நடைபெறுவதை நான் ஆதரிக்கிறேன். எனினும் நான் பிரதமர் பதவியை கைப்பற்ற முயற்சிப்பதாகச் சிலர் கருதுகின்றனர். எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எனினும் நான் உண்மையைப் பேசவேண்டும். மேலும் எனது அறிவுரை மற்றும் கருத்துக்களை தெரிவித்தாக வேண்டும்.

“நான் பிரதமருக்கு எதிராகச் செயல்படவில்லை. அமைச்சரவைக் கூட்டங்களிலும் 1எம்டிபி குறித்து பேசியுள்ளேன். எனினும் என்ன பேசினேன் என்பதை வெளிப்படையாகச் சொல்ல இயலாது. ஏனெனில் எனது கருத்துக்களை திரித்து, நான் பிரதமருக்கு எதிராக செயல்படுவதாக சித்தரித்துவிடுவர்,” என்றார் மொய்தீன் யாசின்.