Home Featured நாடு பெர்சே 4.0 பேரணி: மஞ்சள் குழுவுக்கு எதிராக களமிறங்கும் சிவப்பு குழு

பெர்சே 4.0 பேரணி: மஞ்சள் குழுவுக்கு எதிராக களமிறங்கும் சிவப்பு குழு

468
0
SHARE
Ad

Bersihகோலாலம்பூர் – ‘அமைதியை நேசிக்கும்’ என்ற பெயரில் இயங்கும் பெர்சே எதிர்ப்பு குழுவினர், இவ்வார இறுதியில் நடைபெற உள்ள பெர்சே 4.0 பேரணியின் போது மூர்க்கமான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.

தங்கள் குழுவின் உறுப்பினர்கள் வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எதையும் எதிர்கொள்ள தயாராகி வருவதாக அக்குழுவின் தலைவர் டத்தோ ஜமால் யூனோஸ் தெரிவித்தார்.

இக்குழுவைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை சோகோ வணிக வளாகம் முன்பு கூடினர். பின்னர் விறகுகள் மற்றும் தரை ஓடுகள் (டைல்ஸ்) ஆகியவற்றை தலையாலும், முதுகிலும் உடைத்து தங்களது உடல் வலிமையைப் புலப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

பெர்சே 4.0 பேரணி நடைபெறும் வேளையில், 200க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் திரட்டப்பட உள்ளதாக சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவரான டத்தோ ஜமால் யூனோஸ் தெரிவித்தார்.

“பெர்சே பேரணியால் நாட்டுக்கும், மக்களுக்கும் எந்தவித நன்மையும் இல்லை. எனவே அந்தப் பேரணியை ரத்து செய்ய அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே நாங்களும் திரளப் போகிறோம். அவர்கள் தங்களுடைய பேரணியை ரத்து செய்யும் பட்சத்தில் நாங்களும் இந்த நிகழ்வை ரத்து செய்வோம்.

“காவல்துறையின் உத்தரவுக்கேற்ப பெர்சே பேரணியை ஏதேனும் உள்ளரங்கில் வைத்துக் கொள்ளலாம். ஷா ஆலம் அரங்கு அல்லது ஸ்டேடியம் தித்திவங்சா என எந்த அரங்கை அவர்கள் தேர்வு செய்தாலும் பிரச்சினை எழப் போவதில்லை,” என்று ஜமால் யூனோஸ் மேலும் கூறினார்.

பெர்சே பேரணியில் பங்கேற்பவர்கள் மஞ்சள் டிசட்டைகளை பயன்படுத்துகிறார்கள் எனில், அதன் எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற சட்டைகளுடன் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.

“நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். ஆனால் மஞ்சள் குழுவினரால் நாங்கள் தாக்கப்படும் பட்சத்தில் சிவப்பு குழுவினரால் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்,” என்றும் ஜமால் யூனோஸ் தெரிவித்தார்.